இந்தியா – தாய்லாந்து கூட்டு ராணுவப் பயிற்சியான மைத்ரி-XV (2006)- ல் பங்கேற்பதற்காக இந்திய ராணுவக் குழு இன்று தாய்லாந்து புறப்பட்டது. இப்பயிற்சி தாய்லாந்தின் சூரத் தனியில் உள்ள விபவ்வாடி ரங்க்ஸிட் முகாமில் 2026 ஆகஸ்டு 18 முதல் 31 வரை நடைபெற உள்ளது. கடைசியாக இப்பயிற்சி 2025 செப்டம்பரில் மேகாலயாவின் உம்ரோயில் உள்ள வெளிநாட்டுப் பயிற்சி முகாமில் நடைபெற்றது.
இந்தப் பயிற்சியில், இந்திய ராணுவம், ராயல் தாய் ராணுவத்திலிருந்து தலா 85 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்திய ராணுவக் குழுவில் 9 கூர்கா ரைஃபில்ஸ் வீர்ர்கள் முதன்மையாக இடம்பெற்றுள்ளனர். அதேபோல், தாய்லாந்து ராணுவக் குழுவில் ஐந்தாவது பிரிவின் 25-வது காலாட்படையின் மூன்றாவது பட்டாலியன் பிரிவைச் சேர்ந்த வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இப்பயிற்சியில் வனம், சிறிய நகர்ப்புற பகுதிகளில் செயல்படுவது குறித்து கவனம் செலுத்தப்படும்.
இந்தியா – தாய்லாந்து இடையே ராணுவ ஒத்துழைப்பை வளர்ப்பதே மைத்ரி பயிற்சியின் நோக்கமாகும். ஐக்கிய நாடுகள் பிரகடனத்தின் 7-வது அத்தியாயத்தின் கீழ், வனம், சிறிய நகர்ப்புறப் பகுதிகளில் கிளர்ச்சி, தீவிரவாத செயல்கள் ஆகியவற்றிற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் இக்கூட்டுப் பயிற்சி ஒருங்கிணைந்த திறன்களை மேம்படுத்தும். களப் பயிற்சிகள், போர்க்கால உரையாடல்கள், விரிவுரைகள், செயல் விளக்கங்கள் உள்ளிட்டவை இப்பயிற்சியில் அடங்கும்.
இரு நாட்டு படைக்குழுக்கள் செயல்பாட்டு அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதோடு, கூட்டு நடவடிக்கைகளின்போது சமகால உபகரணங்கள், தொழில்நுட்பங்கள் ஆகியவற்றைக் காட்சிப்படுத்தும்.
2006-ம் ஆண்டு தொடங்கப்பட்ட மைத்ரி பயிற்சி, இந்தியா – தாய்லாந்து இடையே சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதற்கும், ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்குமான முக்கியத் தளமாக உள்ளது. இப்பயிற்சி இரு நாட்டு ராணுவத்தினரிடையே ஒருங்கிணைந்த செயல்திறன், பரஸ்பர புரிந்துணர்வு, நட்புறவை மேம்படுத்துவதோடு இருநாடுகளுக்குமிடையே நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும்.
திவாஹர்
