சுதந்திர தினத்திற்கு முன்பாக எஸ்பிஎன் தீவிரவாதக் குழுவின் திட்டம் முறியடிக்கப்பட்டது!- மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.

சுதந்திர தினத்திற்கு முன்பாக பாதுகாப்பு முகமைகள் ஐஎஸ்ஐ ஆதரவு பெற்ற ஷேஷாத் பட்டிக் கட்டமைப்பிற்கு எதிராக பல மாநிலங்களில் பெரும் நடவடிக்கை மூலம் அதனுடைய தீவிரவாதக் குழுவை முறியடித்துள்ளன. பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையிலும், உள்துறை அமைச்சர் திரு அமித் ஷாவின் வழிகாட்டுதலின் கீழும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையாக, எஸ்பிஎன் அமைப்பிற்கு எதிராக 14 மாநிலங்களில் 253 பேர் விசாரிக்கப்பட்டனர். 80-க்கும் மேற்பட்ட முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டது. 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, சுதந்திர தினத்திற்கு முன்னதாக மோடி அரசு ஐஎஸ்ஐ ஆதரவு பெற்ற தீவிரவாதக் குழுவான ஷேஷாத் பட்டிக் கட்டமைப்பை அழித்ததுடன், அக்குழுவைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்களை கைதுசெய்து, தாக்குதல் திட்டங்களை முறியடித்தது என்று தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் சகிப்புத் தன்மையற்ற கொள்கைக்கு ஒரு சிறந்த உதாரணமாக இந்தியப் பாதுகாப்புப் படையினர் 14 மாநிலங்களில் உள்ள பல்வேறு பகுதிகளில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளைத் தொடங்கி இந்தக் கட்டமைப்பை சிதைத்ததாக கூறியுள்ளார். ஐஎஸ்ஐ நிதியுதவி பெற்ற இக்குழுவிடமிருந்து நவீன குண்டுகள், பாகிஸ்தான் ஆயுதத் தொழிற்சாலை முத்திரைகள் கொண்ட கையெறி குண்டுகள், கைத் துப்பாக்கிகள், தோட்டாக்கள், உளவு பார்ப்பதற்காக பயன்படுத்தப்படும் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இக்கட்டமைப்பு பல்வேறு தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தது என்று கூறியுள்ளார்.

ஷேஷாத் பட்டி கட்டமைப்பு என்பது பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஐஎஸ்ஐ ஆதரவு பெற்ற தீவிரதவாதக் குழுவாகும். இது இந்தியாவில் கையெறி குண்டு, நவீன வெடிகுண்டு, பெட்ரோல் குண்டு தாக்குதல்கள் உள்ளிட்டவற்றில் தொடர்புடையதாகும். காவல்துறை, பாதுகாப்பு, மதத் தலங்களை உளவுப் பார்ப்பதற்கும் கண்காணிப்புக் கேமராக்களை அமைப்பதற்கும், உள்ளூர் இடைத்தரகர்களுக்கு இக்கட்டமைப்பு நிதி அளித்து வருகிறது.

Leave a Reply