போதை மருந்துகள் மற்றும் மனோவியல் பொருட்களின் சட்டவிரோத உற்பத்தி மற்றும் கடத்தலுக்கு எதிரான தனது தொடர்ச்சியான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI) மற்றொரு ரகசிய மருந்து உற்பத்தி ஆலையை முறியடித்துள்ளது. உத்தரப் பிரதேசத்தின் கௌதம் புத்தா நகர், ஜெவார் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் இருந்து இந்த ஆலை செயல்பட்டு வந்தது கண்டறியப்பட்டது.
09/10 ஆகஸ்ட் 2026 அன்று, DRI-யின் புலனாய்வு அடிப்படையிலான நடவடிக்கையின் விளைவாக, ஏறத்தாழ 30 கிலோகிராம் ஆம்பெடமைன்/இடைநிலை வடிவங்கள், போதைப்பொருள் தயாரிப்பிற்குப் பயன்படுத்தப்படவிருந்த சுமார் 30 கிலோகிராம் முன்னோடி இரசாயனங்கள், மற்றும் மனோவியல் பொருட்களை இரகசியமாகத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் முழுமையான உபகரணங்கள் மற்றும் கருவிகள் கைப்பற்றப்பட்டன.
அந்த வளாகத்திலிருந்து பல்வேறு இரசாயனங்கள், உபகரணங்கள் மற்றும் சட்டவிரோதப் பொருட்கள் மீட்கப்பட்டன.
அந்த வளாகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் , மின் உலைகள், குழாய் இணைப்புகள், அறிவியல் மற்றும் அளவீட்டுக் கருவிகள், வினைப்பொருட்கள் மற்றும் மனோவியல் பொருட்களைத் தயாரிக்கத் தேவையான பிற உபகரணங்கள் மற்றும் கருவிகளை உள்ளடக்கிய , முழு வசதிகளுடன் கூடிய ஒரு ரகசிய உற்பத்தி நிலையம் கண்டுபிடிக்கப்பட்டது . பல்வேறு முன்னோடி இரசாயனங்கள், மூலப்பொருட்கள் மற்றும் வினைப்பொருட்களைக் கொண்ட பல திரவக் கொள்கலன்களும் அந்த வளாகத்திலிருந்து மீட்கப்பட்டன. அத்துடன், வெவ்வேறு கொள்கலன்களில் சேமிக்கப்பட்டிருந்த வெள்ளை நிறத் தூள்/படிகப் பொருட்களும் கண்டெடுக்கப்பட்டன. அவற்றை களக் கருவிகளைக் கொண்டு சோதித்ததில், 1985 ஆம் ஆண்டு போதை மருந்துகள் மற்றும் மனோவியல் பொருட்கள் சட்டத்தின் (NDPS) கீழ் பட்டியலிடப்பட்ட ஒரு மனோவியல் பொருளான ஆம்பெடமைன் இருப்பது தெரியவந்தது.
அந்த வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட உற்பத்தி உபகரணங்கள், ஆம்பெடமைன் மற்றும் இரசாயனப் பொருட்களுடன் மீட்கப்பட்ட பொருட்களும், 1985 ஆம் ஆண்டு போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் (NDPS) விதிகளுக்கு முரணாக, மனோவியல் மருந்துகளை சட்டவிரோதமாக உற்பத்தி செய்வதற்காக ஒரு ரகசிய நிலையம் பயன்படுத்தப்பட்டு வந்ததைக் காட்டுகின்றன. அந்த ரகசிய நிலையத்தை நடத்தி வந்த ஒரு வெளிநாட்டவரும், அவருடன் இருந்த இந்தியப் பெண் கூட்டாளியும் 1985 ஆம் ஆண்டு போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
முதற்கட்ட விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் இரவு நேரங்களில் உற்பத்தி உபகரணங்களையும் மூலப்பொருட்களையும் அந்த வளாகத்திற்குக் கொண்டு வந்து, சுமார் ஒரு வாரத்திற்கு அந்த வசதியை அமைத்து இயக்கி, அதன் பிறகு உபகரணங்களை அகற்றி அந்த வளாகத்தைச் சுத்தம் செய்வார்கள் என்று தெரியவந்துள்ளது. உள்ளூர் மக்களிடையே சந்தேகம் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக, இதே சுழற்சி இரண்டு முதல் மூன்று மாத இடைவெளியில் மீண்டும் மீண்டும் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சட்டவிரோத போதைப்பொருள் உற்பத்திக்கு எதிரான DRI-யின் சமீபத்திய நடவடிக்கை
கள்ளத்தனமான போதைப்பொருள் உற்பத்தி உள்கட்டமைப்பு மற்றும் சட்டவிரோத உற்பத்தி, கடத்தலுக்கு ஆதரவளிக்கும் வலையமைப்புகளைத் தகர்ப்பதில் DRI தீவிர கவனம் செலுத்தியதன் விளைவே இந்த தற்போதைய நடவடிக்கையாகும். கடந்த ஒரு மாதத்தில், DRI மேலும் மூன்று கள்ளத்தனமான உற்பத்தி நிலையங்களைக் கண்டுபிடித்துள்ளது — குஜராத்தின் அங்க்ளேஷ்வரில் உள்ள ஒரு மெஃபெட்ரோன் உற்பத்தி நிலையத்தில் , மெஃபெட்ரோன் மற்றும் கணிசமான அளவிலான முன்னோடி இரசாயனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டனர்; மகாராஷ்டிராவின் சதாராவில் உள்ள ஒரு அல்ப்ராசோலம் மற்றும் டயஸெபாம் உற்பத்தி நிலையத்தில் , முடிக்கப்பட்ட மற்றும் இடைநிலை மனோவியல் பொருட்கள் மற்றும் சுமார் 400 லிட்டர் மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர்; மற்றும் மகாராஷ்டிராவின் அம்பர்நாத்தை மையமாகக் கொண்ட ஒரு டிராமாடோல் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வலையமைப்பு, நைஜீரியாவுக்கு 1 லட்சம் டிராமாடோலை ஏற்றுமதி செய்ய முயன்றதுடன் தொடர்புடையது, இதன் விளைவாக மூன்று முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
இந்தத் தொடர்ச்சியான நடவடிக்கைகள், மூல இரசாயனங்களைக் கொள்முதல் செய்வது, இரகசிய ஆய்வகங்களை நிறுவுவது, போதைப்பொருட்கள் மற்றும் மனோவியல் பொருட்களுக்கு நிதியளிப்பது, கடத்துவது, சேமித்து வைப்பது மற்றும் ஏற்றுமதி செய்ய முயற்சிப்பது என சட்டவிரோத போதைப்பொருள் உற்பத்தியின் முழு சூழலமைப்பையும் கண்டறிந்து தகர்ப்பதில் DRI தொடர்ந்து கவனம் செலுத்துவதை வெளிப்படுத்துகின்றன. மேலும், உற்பத்தி நடவடிக்கைகளை மறைக்கவும், கண்டறியப்படுவதைத் தவிர்க்கவும் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகள் கையாளும் அதிநவீன முறைகளையும் இந்த நடவடிக்கைகள் எடுத்துக்காட்டுகின்றன.
எம்.பிரபாகரன்
