மத்திய அமைச்சர் அமித் ஷா, புதுச்சேரி காவல்துறைக்கு குடியரசுத் தலைவரின் வண்ணக்கொடியை வழங்கினார்.

மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா இன்று (09.08.2026) புதுச்சேரி காவல்துறைக்கு குடியரசுத் தலைவர் வண்ணக்கொடியை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், துணைநிலை ஆளுநர் திரு கே. கைலாஷ்நாதன், புதுச்சேரி முதலமைச்சர் திரு என். ரங்கசாமி உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

தமது உரையில், மத்திய அமைச்சர் திரு அமித் ஷா, புதுச்சேரி தென்னிந்தியாவின் ஆன்மீக, கலாச்சார உணர்வின் சின்னமாகத் திகழ்கிறது என்று கூறினார். குடியரசுத் தலைவர் விருது பெற்ற நாட்டின் காவல் படைகளின் வரிசையில் புதுச்சேரி காவல்துறையும் இணைந்துள்ளதை அவர் குறிப்பிட்டார். புதுச்சேரி காவல்துறைக்கு குடியரசுத் தலைவரின் கொடி வழங்கப்பட்டது, அதன் அர்ப்பணிப்பு உணர்வுக்கு ஒரு சான்றாகும் என்று அவர் கூறினார்.

குடியரசுத் தலைவர் விருதைப் பெறுவது எந்தவொரு காவல் படைக்கும் மிகவும் பெருமைக்குரிய தருணங்களில் ஒன்றாகும் என்று திரு அமித் ஷா கூறினார். புதுச்சேரியின் பாதுகாப்பை உறுதி செய்வது, அதன் கௌரவத்தைக் காப்பது ஆகிய பொறுப்புகள் புதுச்சேரி காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், புதுச்சேரி காவல்துறை தனது கடின உழைப்பு, வீரம், சேவை, அர்ப்பணிப்புக்காக இந்த மதிப்புமிக்க கௌரவத்தைப் பெற்றுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

நீண்ட காலமாக பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருந்தபோதிலும், புதுச்சேரி தனது இந்திய அடையாளத்தையும் ஆன்மீக உயிர்சக்தியையும் பாதுகாத்து வந்துள்ளது என்று அமைச்சர் கூறினார். புதுச்சேரியில் 1963 அக்டோபர் 1 அன்று காவல்துறை தலைமை இயக்குநர் பதவி உருவாக்கப்பட்டது எனவும் அன்றிலிருந்து புதுச்சேரி காவல்துறை இந்த எல்லைப் பகுதியின் உள் பாதுகாப்பை வலுப்படுத்தி வருகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு, பிரிட்டிஷாரால் இயற்றப்பட்ட தண்டனைச் சட்டங்களுக்குப் பதிலாக மூன்று புதிய குற்றவியல் சட்டங்களைக் கொண்டு வந்துள்ளது என்று திரு அமித் ஷா கூறினார். இந்தப் புதிய சட்டங்கள் வெறும் தண்டனை வழங்கும் தன்மை கொண்டவை மட்டுமல்ல எனவும் மக்களுக்கு நீதியை உறுதி செய்வதே அவற்றின் நோக்கம் என்றும் அவர் கூறினார். இந்தப் புதிய குற்றவியல் சட்டங்கள் தொழில்நுட்பம், காலக்கெடு, நம்பிக்கை ஆகிய மூன்று தூண்களின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கடந்த 12 ஆண்டுகளில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை வலுப்படுத்த பிரதமர் திரு நரேந்திர மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளார் என்று அமைச்சர் கூறினார். யூனியன் பிரதேசத்தை வலுப்படுத்தும் வகையில், புதுச்சேரி மக்களுக்காக மத்திய அரசு பல வளர்ச்சித் திட்டங்களை மேற்கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார். தேசிய நெடுஞ்சாலை 332-ஏ, ₹2,200 கோடி செலவில் நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். மேலும், மத்திய அரசு இங்கு சுமார் 3,400 மீட்டர் நீளமும் 45 மீட்டர் அகலமும் கொண்ட ஒரு விரிவாக்கப்பட்ட ஓடுபாதையை அமைத்துள்ளது என்றும் அவர் கூறினார்.

1950 முதல் 2014 வரை, மத்திய அரசு புதுச்சேரியின் வளர்ச்சிப் பணிகளுக்காக ₹3,500 கோடி மட்டுமே வழங்கியிருந்தது என்று திரு அமித் ஷா கூறினார். 2014 முதல் 2026 வரை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு புதுச்சேரியின் வளர்ச்சிக்காக ₹13,762 கோடியை வழங்கியுள்ளது என்றும், இது முன்பு வழங்கப்பட்ட தொகையை விட கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகம் எனவும் அவர் தெரிவித்தார். கடந்த ஒன்பது ஆண்டுகளில், மத்திய அரசு புதுச்சேரியில் ₹39,000 கோடி மதிப்பிலான தொழில்துறை முதலீடுகளுக்கும் வழிவகுத்துள்ளது என்றும் திரு அமித் ஷா கூறினார்.

Leave a Reply