நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் நிதி அதிகாரிகளின் வாட்ஸ்அப் கணக்குகளை முடக்கி, பெருந்தொகை நிதி மோசடியில் ஈடுபடும் ‘பாஸ் ஸ்கேம்’ குறித்து இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம் எச்சரித்துள்ளது.
‘Statement of Account.zip’, ‘RBI.zip’ மற்றும் ‘MCA.zip’ போன்ற போலி பெயர்களில் வாட்ஸ்அப், எஸ்.எம்.எஸ் மற்றும் மின்னஞ்சல்கள் மூலம் அனுப்பப்படும் zip கோப்புகளைத் தரவிறக்கம் செய்யும்போது, விண்டோஸ் கணினிகளில் மால்வேர் ஊடுருவி வாட்ஸ்அப் வெப் கணக்குகளைக் கைப்பற்றுகிறது.
பின்னர், நிறுவனங்களின் உயர் அதிகாரிகளின் வாட்ஸ்அப் கணக்குகள் மூலம் நிறுவனத்தின் நிதிப் பிரிவினருக்கு அவசர பணப் பரிமாற்றம் செய்ய உத்தரவிட்டு மோசடி செய்யப்படுகிறது. டெல்லி, குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இத்தகைய சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதனைத் தடுக்க மத்திய உள்துறை அமைச்சகத்தின் I4C மையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கடந்த 30 நாட்களில் 58,000-க்கும் மேற்பட்டோருக்கு ‘I4CMHA-G’ என்ற எஸ்.எம்.எஸ் மூலம் எச்சரிக்கை அனுப்பப்பட்டுள்ளதுடன், ‘சஹயோக்’ போர்டல் வழியாக 10,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளதுடன், CERT-In மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களுடன் இணைந்து தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
முன்பின் தெரியாத கோப்புகளைத் தரவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும், சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகளை 1930 என்ற உதவி எண் அல்லது www.cybercrime.gov.in இணையதளத்தில் புகாரளிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எஸ்.சதிஸ் சர்மா
