பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (02.08.2026) வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான போதைப்பொருள் இல்லாத இளைஞர் உறுதிமொழி இயக்கத்தைத் தொடங்கி வைத்தார். காணொலிக் காட்சி மூலம் நடைபெற்ற நாடு தழுவிய மாபெரும் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், 28,000-க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து இணைந்திருந்த ஒரு கோடிக்கும் அதிகமான இளைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்குப் பாராட்டுத் தெரிவித்தார். இந்தத் தருணத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், இந்தக் கூட்டத்தை ஒரு ஆழமான தேசிய உறுதிப்பாடாகக் குறிப்பிட்டார். இன்று, நாட்டு மக்களாகிய நாம் அனைவரும் ஒரு மகத்தான, முக்கியமான தீர்மானத்திற்காக ஒன்றிணைந்துள்ளோம் என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
இந்த முன்முயற்சியின் விரிவான தன்மையை எடுத்துரைத்த பிரதமர், இந்த இயக்கம் தனிநபர் நலனைத் தாண்டி, குடும்பங்கள், சமூகம், ஒட்டுமொத்த தேசத்தின் பரந்த நலன்களுக்கும் முக்கியமானது என்று விளக்கினார். இதன் பின்னணியில் உள்ள முக்கிய நோக்கத்தை சுட்டிக் காட்டிய அவர், வளர்ச்சியடைந்த பாரதத்தை அடைவதற்கு, உடல்ரீதியாக ஆரோக்கியமான, மனரீதியாக வலிமையான சூழல் அவசியம் என்றார். மோசமான பழக்கவழக்கங்களிலிருந்து முற்றிலும் விடுபட்ட, மிகுந்த தன்னம்பிக்கை கொண்ட ஒரு இளம் தலைமுறை அடிப்படையாகத் தேவை என்று அவர் கூறினார். இப்போது, தேசம் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நிர்ணயித்துள்ள நிலையில், நாட்டின் இளைஞர்கள் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் ஆரோக்கியமாகவும், தன்னம்பிக்கை நிறைந்தவர்களாகவும் இருப்பதுடன், போதைப்பொருள் போன்ற அழிவுகரமான பழக்கவழக்கங்களிலிருந்து நிரந்தரமாக விலகி இருப்பதும் அவசியமாகும் என்று திரு நரேந்திர மோடி திட்டவட்டமாகக் கூறினார்.
இந்த இயக்கத்தின் தொடக்கத்தைப் பற்றிப் பேசிய பிரதமர், கடந்த ஆண்டு காசி எனும் புனித பூமியில் ஒரு முன்னோடித் திட்டமாக இந்த முயற்சி முதலில் தொடங்கப்பட்டதைக் குறிப்பிட்டார். அறிவியல் தெளிவு, ஆன்மீக ஆற்றல், ஆழ்ந்த கலாச்சார அர்ப்பணிப்பு ஆகியவற்றின் தனித்துவமான கலவையே இந்த இயக்கத்தை இயக்குகிறது என்பதை எடுத்துரைத்த அவர், அதன் மிகப்பெரிய விரிவாக்கத்தையும் குறிப்பிட்டார். காசி பிரகடனத்தின் கீழ் 125-க்கும் மேற்பட்ட ஆன்மீக அமைப்புகள், எண்ணற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஆதரவுடன், நலன் சார்ந்த அந்த எண்ணம் இப்போது வெற்றிகரமாக ஒரு தேசிய இயக்கமாக மாறியுள்ளது என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துள்ள லட்சக்கணக்கான இளைஞர்களைப் பாராட்டிய பிரதமர், தனிப்பட்ட முறையில் போதைப்பழக்கத்திற்கு எதிராக அவர்கள் இருக்கும் அதே சமயம் தங்கள் பள்ளிகள், கல்லூரிகள், சமூகங்களில் போதைப்பொருள் இல்லாத வாழ்க்கை குறித்த செய்தியைத் தீவிரமாகப் பரப்புவதில் இந்த இளைஞர்கள் காட்டிய உறுதியான அர்ப்பணிப்பைப் புகழ்ந்தார். இந்த இயக்கத்தின் லட்சியமிக்க 100 வார கால செயல்திட்டத்தை விவரித்த அவர், புதிய பங்கேற்பாளர்களைத் தொடர்ந்து ஈடுபடுத்தும் வகையில், வரவிருக்கும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கலை, கலாச்சாரம், விளையாட்டு, தியானம் ஆகியவற்றை உள்ளடக்கிய பிரத்யேக செயல்பாடுகள் இடம்பெறும் என்று விளக்கினார். வரவிருக்கும் 100 ஞாயிற்றுக்கிழமைகள், முற்றிலும் போதைப்பொருள் இல்லாத இந்தியாவை நோக்கிய 100 வலுவான படிகளாக நிச்சயமாக அமையும், என்று திரு நரேந்திர மோடி தெரிவித்தார்.
மாணவர்கள், நாட்டு நலப் பணித் திட்ட உறுப்பினர்கள், மை பாரத் தன்னார்வலர்கள் அடங்கிய மாபெரும் இணையவழிக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், நாட்டின் இளைஞர்கள் வெளிப்படுத்திய ஆழ்ந்த விழிப்புணர்வு, பகுத்தறவு, தீவிர அர்ப்பணிப்பு ஆகியவை குறித்துப் பெருமிதம் தெரிவித்தார். இளைய தலைமுறையினரை இந்தியாவின் ‘அமிர்தத் தலைமுறை’ என்று குறிப்பிட்ட அவர், 2047-ம் ஆண்டுக்கான வளர்ச்சி இலக்குகளை நோக்கி நாட்டை வழிநடத்துவதற்கு அவர்களின் ஆற்றல், திறன், திறமை ஆகியவை இன்றியமையாதவை என்று குறிப்பிட்டார். நாட்டின் எதிர்காலத்திற்காகவும், தங்கள் சொந்த வாழ்க்கைக்காகவும், போதைப்பழக்கத்திலிருந்து தங்களை விடுவித்துக் கொள்வது முற்றிலும் அவசியம் என்று இளைஞர்களுக்குப் பிரதமர் வலியுறுத்தினார்.
போதைப்பழக்கம் எவ்வாறு கவனத்தைச் சிதைத்து, கனவுகளை அழிக்கிறது என்பது குறித்து பிரதமர் எடுத்துரைத்தார். பெற்றோரின் கனவுகளைச் சிதைப்பது முதல் முதியவர்களுக்கு அன்றாட வேதனையை ஏற்படுத்துவது வரை, குடும்பங்களுக்கு ஏற்படும் ஆழமான பக்கவிளைவுகளை விளக்கிய அவர், பரந்த சமூகத்தில் ஏற்படும் பாதிப்பையும் விளக்கினார். ஒரு குடும்பத்திலோ அல்லது சமூகத்திலோ இந்தப் பேரழிவு நிகழும்போது, ஒட்டுமொத்த தேசத்தின் பலமும் அடிப்படையாகவே பலவீனமடைகிறது என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
போதைப்பொருட்களின் தன்மை குறித்து இளைஞர்களை எச்சரித்த பிரதமர், போதைப்பொருட்கள் வழங்கும் தற்காலிக போதை இறுதியில் அவர்களின் தொழில், குடும்ப வாழ்க்கையில் நிரந்தரமான வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்று கூறினார். எந்தச் சூழ்நிலையிலும் போதைக்கு எந்தவிதமான சமூக அங்கீகாரத்தையும் நாம் அளிக்கவே கூடாது என்று திரு நரேந்திர மோடி திட்டவட்டமாகக் கூறினார்.
போதைப்பழக்கத்தை வெல்வதில் சமூக ஒத்துழைப்பு, யோகா, தியானம், நவீன மறுவாழ்வு மையங்களின் செயல்திறனை எடுத்துரைத்தார். சமூக கௌரவம் குறித்த தவறான கவலைகளை விட, மருத்துவத் தலையீட்டிற்கு முன்னுரிமை அளிக்குமாறு குடும்பங்களை வலியுறுத்திய அவர், பாதிக்கப்படக்கூடிய குழந்தைகள் இந்த வலையில் சிக்குவதைத் தடுக்க, வெளிப்படையான குடும்ப உரையாடல் கலாச்சாரம் தேவை என்று வலியுறுத்தினார்.
கல்வித்துறை வல்லுநர்களுக்கு ஒரு குறிப்பிட்ட வேண்டுகோளை விடுத்த பிரதமர், கல்லூரி, பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் போதைப்பொருட்களின் அபாயங்கள் குறித்த விவாதங்களைத் தங்களின் வழக்கமான பாடத்திட்டத்தில் தீவிரமாக இணைத்துக்கொள்ளவும், தங்கள் வளாகங்களில் போதை எதிர்ப்பு இயக்கங்களைத் தொடங்கவும் வலியுறுத்தினார். போதைப்பழக்கத்திலிருந்து மீண்டு வருபவர்கள் மீது கடந்த கால களங்கத்தை சுமத்தாமல், அந்த நபர்களுக்குச் சமூக மரியாதையும் வாய்ப்புகளும் வழங்கப்பட வேண்டும் என்று பிரதமர் அழைப்பு விடுத்தார்.
நாடு தழுவிய அளவில் முன்னெப்போதும் இல்லாத அதிரடிச் சோதனைகள், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான பறிமுதல்கள், போதைப்பொருள் வியாபாரிகளையும் கடத்தல்காரர்களையும் குறிவைத்து நடத்தப்படும் கைது நடவடிக்கைகளை அவர் சுட்டிக்காட்டினார். இந்த முக்கியமான போராட்டத்தில் அரசு இளைஞர்கள் நலனில் உறுதியாக நிற்கும் என்று அவர் உறுதியளித்தார். இளைய தலைமுறையின் திறன் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை வெளிப்படுத்திய அவர், இந்த தேசிய முன்முயற்சிக்கு மாபெரும் வெற்றி கிடைக்கும் என்று கூறினார். நமது இளைஞர்கள் போதைக்கு அடிமையாவதிலிருந்து விடுபட்டுத் தங்கள் ஆற்றலைப் பாதுகாத்துக் கொள்வார்கள் என்றும், வளர்ச்சியடைந்த பாரதத்துக்கான தீர்மானங்களை முன்னெடுத்துச் செல்வார்கள் என்றும் தாம் உறுதியாக நம்புவதாகக் கூறிப் பிரதமர் திரு நரேந்திர மோடி தமது உரையை நிறைவு செய்தார்.
திவாஹர்
