மத்திய ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் இன்று (18.07.2026) ராம்நகர்-டேராடூன் விரைவு ரயில் சேவையை காணொலிக் காட்சி வாயிலாகக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் உத்தரகாண்ட் முதலமைச்சர் திரு புஷ்கர் சிங் தாமியும் காணொலிக் காட்சி வாயிலாகக் கலந்துகொண்டார்.
இந்த விரைவு ரயில் ஒவ்வொரு புதன், வெள்ளிக்கிழமைகளிலும் இயக்கப்படும். இந்த ரயில் செல்லும் வழியில் காஷிப்பூர், ரோஷன்பூர், பிப்பல்சானா, மொராதாபாத், நஜிபாபாத், ஹரித்வார் ஆகிய நிறுத்தங்களில் நின்று செல்லும்.
இந்தப் புதிய சேவையானது, உத்தரகாண்டில் உள்ள நைனிடால், உதம் சிங் நகர், ஹரித்வார், டேராடூன் மாவட்டங்களிலும், உத்தரப் பிரதேசத்தில் உள்ள மொராதாபாத், பிஜ்னோர் மாவட்டங்களிலும் வசிக்கும் மாணவர்கள், விவசாயிகள், வர்த்தகர்கள், அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பயனளிக்கும்.
இந்த ரயில் இப்பகுதியில் சுற்றுலாவையும் புனித யாத்திரையையும் ஊக்குவிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு வைஷ்ணவ், உத்தராகண்டில் ரயில் நிலையங்களின் மறுசீரமைப்புப் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக குறிப்பிட்டார். மாநிலத்தில் 11 நிலையங்கள் மறுசீரமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த சில ஆண்டுகளில் உத்தராகண்டில் ரயில் இணைப்பு கணிசமாக மேம்பட்டுள்ளதாகவும், மாநிலம் முழுவதும் பல புதிய ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய உத்தராகண்ட் முதலமைச்சர் திரு புஷ்கர் சிங் தாமி, உத்தராகண்ட் மாநிலம் சாதனை அளவாக ₹4,769 கோடி ரயில்வே நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுள்ளதாகவும், அதே வேளையில் மாநிலத்தில் ₹40,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான ரயில்வே திட்டங்கள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
ஹரித்வார் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் திரு திரிவேந்திர சிங் ராவத், கார்வால் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் அனில் பலூனி, மூத்த ரயில்வே அதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
எம்.பிரபாகரன்
