இந்து என். ராம் அவர்களுக்கு,
ஒரு காலத்தில் உங்களது எழுத்துக்களை விடாமல் வாசித்தவன் நான்.மிகச் சிறப்பான முறையில் அரசியல் வாழ்வின் எதிர்காலம் கடந்த காலம் நிகழ் காலம் மூன்றையுமே உன்னிப்பாகக் கவனித்து எழுதக்கூடிய மிக சிறந்த ஒரு பத்திரிகையாளராக நீங்கள் இருந்தீர்கள்.
குறிப்பாக போபர்ஸ் ஊழல் வழக்கில் ராஜீவ் காந்தி காலத்தில் இருந்து என்ன நடந்தது என்பதற்கான உண்மை விளக்கங்களை வரிசையாக வெளிப்படுத்தி அந்த ஊழல் மிக மோசமான ஒன்று என நிரூபித்தீர்கள்.. அப்பொழுது இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த வி. பி. சிங். இது பத்திரிகைகளில் சித்ரா சுப்பிரமணியம் மற்றும் என். ராம் போன்ற பத்திரிகையாளர்களால் இந்து மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்களின் மூலம் வெளியானது.
உண்மைத் தன்மைக்கு அப்பால் நீங்கள் ஈழத்தமிழர் விவகாரத்தில் அவற்றின் போராட்டத்தன்மை மற்றும் இனப் படுகொலை மீதான விமர்சனங்களில் நீங்கள் சிங்கள அரசுக்கு ஆதரவாக 1986 பின் சந்திரகாவுக்கு ஆதரவாக எழுதினீர்கள் அதில் இருந்து தான் உங்களது தொடர்பை நான் துண்டித்துக் கொண்டேன்.
இப்பொழுது நீங்கள் திமுகவில் செயல்படும் ஏதோ ஒரு நிர்வாகி போல அதற்கு முட்டு கொடுப்பதைத் தொடர்ந்து பார்த்து வருகிறேன்.எப்பொழுது பார்த்தாலும் திமுகவை ஆதரிக்காவிட்டால் இந்துத்துவா வந்துவிடும் இந்துத்துவா வந்துவிடும் என்று கத்துகிறீர்கள்.
தமிழ்நாட்டில் இந்துத்துவாவைப் பொருத்துவதற்கு பெரிய திட்டங்கள் ஒன்றும் இன்றைய பாரதிய ஜனதா ஆட்சியில் இல்லை என்பதை நீங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
டில்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில்
நடந்த இஸ்லாமிய தீவிரவாத தாக்குதலுக்கு என்ன உங்கள் பதில் ? நாடே பற்றியெறிந்தாலும் ஆர்பாட்டம் நடத்தியே தீருவோம் என்பது நல்லதோர் மாடல் !
பாரதிய ஜனதாக் கட்சி தனது இந்திய தேசியஅரசியல் நிலைப்பாட்டை ஒன்றுபட்ட இந்திய வல்லரசு என்கிற நோக்கில் மட்டுமே தான் தமிழ்நாட்டில் மேற்கொள்கிறது அது மக்களின் குறைகளைக் கேட்டு அறிகிறது. இங்கிருக்கும் ஆளுங்கட்சி மீது விமர்சனம் செய்கிறது. இதை முதலில் நீங்கள் புரிந்து கொள்ளுங்கள் . இதுதான் தார்மீகமான அரசியல் செயல்பாடு.
ஒரு அரசியல் கட்சி இந்தியா முழுக்க தனது பரப்புரையைத் தனக்கான ஆதரவை தனது நலத்திட்டங்கள் மூலம் வாக்குறுதிகளாகக் கொண்டு தேர்தலை சந்திக்கும் என்பது ஜனநாயக முறை. அதிலிருந்து மீறி பாரதிய ஜனதா ஒன்றும் வன்முறையை இங்கு வளர்க்கவில்லை என்பதை நீங்கள் மீண்டும் ஒரு முறை தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்.
இந்துத்துவா வந்துவிடும் வந்துவிடும் என்று சொல்கிற நீங்கள் ஒரு பக்கம் கண்ணுக்குத் தெரியாத ஊழலை அதன் அடிப்படையில் இங்கு நடக்கக்கூடிய குடும்ப அரசியலை கட்சி சார்ந்த கார்ப்பரேட் கொள்ளையை ஆதரிக்கிறீர்களா?
திமுகவில் அது தோற்றுவிக்கப்பட்ட ஆரம்பகால அண்ணா போன்றோரின் ஊழலற்ற மக்களாட்சி தத்துவத்திலா அதன் கொள்கை அடிப்படையிலா இங்கு ஆட்சி நடக்கிறது? பெரிய பத்திரிகையாளர் என்கிறீர்கள் இதை எல்லாம் எதிர்த்து எழுதுவதற்கு உங்களால் முடியவில்லை. இந்துத்துவம் என்று பாரதிய ஜனதாவை விட்டு நீங்கி இருப்பது போல ஊழலில் மோசமான ஆட்சி என்கிற முறையில் திமுகவையும் விட்டு விலகி தானே ஒரு நடுநிலை பத்திரிக்கையாளராக நீங்கள்இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு திமுகவில் வட்டச் செயலாளர் போல அதற்கு ஆதரவு கொடுத்துக் கொண்டு இருக்கிறீர்கள். அதனால் என்ன பலனைப் பெறுகிறீர்கள் என்று தெரியவில்லை.
அமெரிக்காவில் பைபிளின் மீது இங்கிலாந்தில் இன்னும் உலக நாடுகளில் எல்லாம் பைபிளின் மீது வாக்குறுதி எடுத்துக் கொண்டுதான் ஆட்சி அமைப்பிற்கு அல்லது திருச்சபைகளுக்கு சென்று விட்டு ஆட்சி அமைக்கிறார்கள். இந்தியாவில் அதுபோலவா பைபிளின் மீதா அல்லது கீதை மீதா சத்தியம் செய்து அரசியல் சட்டம் அதன் பிரகாரமா நடந்து கொண்டிருக்கிறது?
பகுத்தறிவோ இறை நம்பிக்கையோ எல்லா கட்சிகளும் அதன் அளவில் மக்களுக்கு நலம் செய்யக்கூடிய கொள்கைகள் தத்துவங்கள் அடிப்படையில் ஒரு அமைதியான விடுதலையான ஆட்சியைத் தரத்தான் முயலும். அவற்றில் நம்பிக்கை உள்ளவர்கள் வாக்களிக்கிறார்கள். இது ஜனநாயகத்தினுடைய தேர்தல் போட்டி. இந்த போட்டியில் நீங்கள் ஒரு நடுநிலையாளாராக இருக்கக்கூடிய பத்திரிகையாளர் எப்படி திமுகவிற்கு மட்டும் முட்டுக்கொடுத்து கொண்டு இன்னும் எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். உலக அரசியல் எல்லாம் தெரிந்த நீங்கள் சிறுபான்மை பெரும்பான்மை ஆட்சி அதிகாரம் எதிர்காலம் நாட்டின் தேசியம் இறையாணமை பற்றி எல்லாம் எப்படி அது அமைகிறது அந்தந்த மண்ணிற்கு ஏற்ப என்றெல்லாம் அறிந்து தான் பேசுகிறீர்களா?
இடதுசாரிச் சிந்தனையில் வளர்ந்த நீங்கள் இந்த பிற்காலத்தில் பத்திரிகைத்துறையில் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதோடு மட்டுமின்றி கடந்த காலத்தையும் திரும்பிப் பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வளவு குறுகிய இடத்தில் உங்களது செயல்பாடுகள் முடங்கி விட்டதை நினைத்து வருந்துகிறேன்.
சரி, திமுக சொன்ன இந்த தேர்தல் கால உறுதிமொழிகள் என்ன ஆச்சு… இதில் உங்கள்
பதில் என்ன ⁉️
- நீட் விலக்கு எங்கே
- அனைத்து பள்ளிகளிலும் கணினி ஆசிரியர்கள் நியமனம் எங்கே
- பகுதி நேர ஆசிரியர் பணி நிரந்தரம் எங்கே
- முதியோர் உதவித்தொகை ₹1500 எங்கே
- கல்வி கடன் தள்ளுபடி எங்கே
- அனைவருக்கும் நகை கடன் தள்ளுபடி எங்கே
- மாதம் ஒருமுறை மின் கணக்கீட்டு முறை எங்கே
- பழைய ஓய்வூதியம் எங்கே
- பூரண மது விலக்கு எங்கே
- பெட்ரோல் விலை லிட்டருக்கு ₹10 குறைப்பு எங்கே
- டீசல் விலை லிட்டருக்கு ₹5 குறைப்பு எங்கே
- கேஸ் சிலிண்டர் மானியம் ₹100 எங்கே.
- வீட்டில் ஒருவர்க்கு வேலை எங்கே
இன்னும் பல உள்ளது - அனைத்து மகளிர் உரிமை தொகை எங்கே?
இப்படி பல உள்ளன.
இவ்வாறு மூத்த வழக்குரைஞரும், பாஜக பிரமுகருமான கே எஸ் ராதாகிருஷ்ணன் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கு இந்து என். ராம் என்ன பதில் சொல்லப் போகிறார்?
-கே.பி. சுகுமார்.
