பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று (2026 ஆகஸ்ட் 31) பிஷ்கெக்கில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டிற்கு இடையே, கிர்கிஸ்தான் அதிபர் திரு சாதிர் ஜபரோவ்-வைச் சந்தித்தார்.
கிர்கிஸ்தான் சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிரதமர் அந்நாட்டு அதிபர் திரு ஜபரோவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதே நாளில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டின் தொடக்கம் அமைந்துள்ளது ஒரு சிறப்பான அம்சம் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், 26-வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டை நடத்துவதற்காகவும் அவர் அந்நாட்டு அதிபர் திரு ஜபரோவுக்கு வாழ்த்துத் தெரிவித்தார். இரு தலைவர்களும் இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை ஆய்வு செய்ததுடன், இந்தியாவுக்கும், கிர்கிஸ்தானுக்கும் இடையேயான உத்திசார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர். இரு பொருளாதாரங்களுக்கு இடையேயான பரஸ்பர தன்மைகளைக் கருத்தில் கொண்டு, பொருளாதார, வர்த்தக ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்த அவர்கள் ஒப்புக்கொண்டனர். மாணவர் பரிமாற்றங்கள், கலாச்சார ஒத்துழைப்புகள் உள்ளிட்டவற்றின் மூலம் மக்களிடையே உறவுகளை வளர்ப்பது குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.
கிர்கிஸ்தான் தலைமையில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டங்களில் இந்தியாவின் வலுவான பங்கேற்பை பிரதமர் எடுத்துரைத்தார். இது, இரு நாடுகளுக்கும் இடையேயான நெருங்கிய, நீண்டகால உறவுகளின் பண்புகளான பரஸ்பர மரியாதை, நம்பிக்கை, ஆதரவு ஆகியவற்றைப் பிரதிபலிப்பதாக அவர் மேலும் கூறினார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்காகவும், அன்பான உபசரிப்புக்காகவும் கிர்கிஸ்தான் அதிபர் திரு சாதிர் ஜபரோவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.
எம்.பிரபாகரன்
