புதுதில்லியில் இன்று நடைபெற்ற 18 தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனங்களின் ஒருங்கிணைந்த பட்டமளிப்பு விழாவில், குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத்தலைவர், ஜவுளி, ஆடை உற்பத்தித் துறைகள், நமது கலாச்சார பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக மட்டுமின்றி, லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்திற்கு அடித்தளமாகவும் உள்ளது என்று கூறினார்.
பாரம்பரிய கைவினைஞர்களுக்கு ஆதரவும் வழிகாட்டுதலும் வழங்கப்படும் போது, அது அவர்களுடைய அடுத்த தலைமுறையினரை இந்தத் தொழில்களில் பெருமையுடனும், நம்பிக்கையுடனும் ஈடுபட ஊக்குவிக்கும் என்று தெரிவித்தார்.
ஜவுளி, ஆடை உற்பத்தித் துறையில் உள்ள நவீன தொழில்நுட்பங்களை அப்பகுதிகளில் உள்ள நெசவாளர்கள், கைவினைஞர்கள் ஆகியோருக்கு அறிமுகப்படுத்தவும் அவர்களை சந்தைகளுடன் இணைக்கவும், கைவினைத் தொகுப்பு முன்முயற்சி போன்ற திட்டங்களை பல்வேறு தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்படுத்தி வருவது தமக்கு மகிழ்ச்சியளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
தற்போது, நமது நாடு முன்னெப்போதும் இல்லாத வகையில் பெரும் நம்பிக்கையுடன் உலகளவில் தமது பங்களிப்பை விரிவுபடுத்தி வருகிறது என்று குடியரசுத்தலைவர் தெரிவித்தார். உலக அளவில் இந்தியாவின் நிலையை மேம்படுத்துவதில் ஆடை வடிவமைப்பு தொழில்நுட்பத் துறைக்கு பெரும் சாத்தியக்கூறு உள்ளதாகக் கூறினார்.
எனவே பட்டம் பெறும் மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
திவாஹர்
