ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள ரஷ்ய அறிவியல் அகாடமியின் சுற்றுச்சூழல், பரிணாம வளர்ச்சி நிறுவனத்தில் பனிச்சிறுத்தைகள் குறித்த ஆராய்ச்சி, பாதுகாப்பு தொடர்பான ரஷ்ய – இந்திய வட்டமேசை கூட்டம் நேற்று (2026 ஆகஸ்ட் 26) நடைபெற்றது. பனிச்சிறுத்தைகள் குறித்த ஆராய்ச்சி, பாதுகாப்பில் சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், சர்வதேச புலியினங்கள் கூட்டமைப்பு, இர்பிஸ் அமைப்பு இடையே 2025 டிசம்பரில் கையெழுத்தான கூட்டாண்மை ஒப்பந்தத்தின் அடிப்படையில் இக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்துகொண்ட மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சகத்தின் பிரதிநிதிகள், அறிவியல் பூர்வமான முன்முயற்சிகள் மூலம் பனிச்சிறுத்தைகளின் பாதுகாப்பில் இந்தியாவின் முன்னேற்றங்களை எடுத்துரைத்தனர். பனிச்சிறுத்தைகளின் எண்ணிக்கை மதிப்பீடு, ரேடியோ டெலிமெட்ரி தொழில்நுட்ப பயன்பாடு, மரபணு பகுப்பாய்வு ஆகியவற்றில் அடைந்துள்ள முன்னேற்றங்கள் குறித்தும், பாதுகாப்பு பணிகளில் அறிவியல் தொழில்நுட்பங்களின் முக்கியத்துவம் குறித்தும் இந்திய வனவிலங்குகள் அமைப்பின் அதிகாரிகள் விளக்கினர்.
ரஷ்யாவின் இயற்கை வளங்கள் அமைச்சகம், மாஸ்கோ உயிரியல் பூங்கா, பனிச்சிறுத்தை ஆராய்ச்சி நிபுணர்கள் இதில் பங்கேற்றனர். பனிச்சிறுத்தைகள் குறித்த அறிவியல் ஆய்வு, பாதுகாப்பு பணிகளில் கூட்டு அணுகுமுறையை முன்னெடுப்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பனிச்சிறுத்தைகள் ஆராய்ச்சி, கண்காணிப்பு, பாதுகாப்பு ஆகியவற்றில் அறிவாற்றல், அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும், சர்வதேச ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும் இந்த வட்டமேசை கூட்டம் ஒரு சிறந்த தளமாக அமைந்தது.
திவாஹர்
