மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லி செங்கோட்டை அருகே குண்டுவெடிப்பு நடந்த இடத்தை பார்வையிட்டு நிலைமையை ஆய்வு செய்தார்.
டெல்லி காவல்துறை ஆணையர் மற்றும் சம்பவ இடத்தில் இருந்த பிற மூத்த அதிகாரிகளிடம் இந்த குண்டு வெடிப்புச் சம்பவம் குறித்து விவரங்களை கேட்டறிந்தார். மேலும் லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்தவர்களைச் சந்தித்தார். இந்த வழக்கு குறித்து அனைத்து கோணங்களிலும் முழுமையான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
குண்டு வெடிப்புச் சம்பவம் குறித்த தகவல் கிடைத்தவுடன், டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவு, குற்றப்பிரிவு, என்ஐஏ, என்எஸ்ஜி மற்றும் எஃப்எஸ்எல் ஆகியவற்றின் குழுக்கள் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு, குண்டு வெடிப்புக்கானக் காரணத்தைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளன.
குண்டுவெடிப்பு செய்தி கிடைத்தவுடன், பிரதமர் நரேந்திர மோதி தொலைபேசியில் தொடர்புக் கொண்டு கள நிலவரத்தை கேட்டறிந்தார்.
இந்த குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பவ இடத்திலிருந்து சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் முழுமையாக பகுப்பாய்வு செய்யப்படும் நடவடிக்கை தொடங்கியுள்ளது.
–Dr.துரைபெஞ்சமின், BAMS.,
M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA OPC PVT LTD,
Mobile No.98424 14040
