இந்தியா-கானா கூட்டு வர்த்தகக் குழுவின் 4-வது அமர்வு அக்ராவில் நடைபெற்றது.

மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் வர்த்தகத் துறை கூடுதல் செயலாளர் திரு அமர்தீப் சிங் பாட்டியா மற்றும் கானா குடியரசுக்கான இந்திய தூதர் திரு மணீஷ் குப்தா மற்றும் வர்த்தகத் துறையின் பொருளாதார ஆலோசகர் திருமதி பிரியா பி. நாயர் ஆகியோர் அக்ராவில் கானா நாட்டு சக வர்த்தக அதிகாரிகளுடன் கூட்டு வர்த்தகக் குழு கூட்டத்தை 2024, மே, 2-ம் தேதி முதல் 3-ம் தேதி வரை நடத்தினார்கள். கானா குடியரசின் வர்த்தக மற்றும் தொழில்துறை துணை அமைச்சர் மைக்கேல் ஒக்யேர் – பாஃபி, வர்த்தகத் துறை கூடுதல் செயலாளர் திரு. அமர்தீப் சிங் பாட்டியா  ஆகியோர் இக்கூட்டத்திற்கு இணைத்தலைமை வகித்தனர்.

இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து இரு தரப்பினரும் விரிவான மறுஆய்வு மேற்கொண்டனர். டிஜிட்டல் உருமாற்றத் தீர்வுகள் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் சாத்தியக்கூறுகள் குறித்தும் இரு தரப்பினரும் விவாதித்தனர்; உள்ளூர் நாணய தீர்வு அமைப்பு மற்றும் ஆப்பிரிக்க கண்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் வழங்கும் வாய்ப்புகள் குறித்தும் விவாதித்தனர்.

இருதரப்பு வர்த்தகம் மற்றும் பரஸ்பரம் பயனளிக்கும் முதலீடுகளை மேம்படுத்துவதற்கான பல துறைகளை இரு தரப்பினரும் கண்டறிந்தனர். மருந்துகள், சுகாதாரம், தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம், வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்துதல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மின்சாரத் துறை, டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் டிஜிட்டல் கட்டமைப்பு, முக்கிய கனிமங்கள், ஜவுளி மற்றும் ஆடைகள் போன்ற துறைகளில் ஒத்துழைப்பு இதில் அடங்கும்.

இந்தியாவிலிருந்து  சென்றிருந்த அதிகாரபூர்வ பிரதிநிதிகள் குழுவில் இந்திய புவியியல் ஆய்வுத் துறை, ஏற்றுமதி – இறக்குமதி வங்கி மற்றும் இந்திய மருந்தியல் ஆணையம் ஆகியவற்றின் அதிகாரிகள் இடம் பெற்றிருந்தனர்.

எம்.பிரபாகரன்

Leave a Reply