தமிழக அரசு, தென்னை விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.

தமிழகத்தில் சுமார் 4.5 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் தென்னை விவசாயம் நடைபெறுகிறது.

நம் நாடு முழுவதற்குமான மக்களின் தேவைக்கு 70 சதவீதம் பாமாயில் மற்றும் இதர ஆயில்கள் இறக்குமதி செய்யப்படுகிறது.

குறிப்பாக 10 சதவீதம் அளவிற்கு தேங்காய் எண்ணெய் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. இறக்குமதியை குறைத்து தேங்காய் எண்ணெயை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தமிழக அரசே நேரடியாக தேங்காய் எண்ணெயை கொள்முதல் செய்து நியாயவிலைக் கடைகளில் வழங்க வேண்டும்.

தமிழக அரசு பாமாயிலை விட அதிக அளவில் தேங்காய் எண்ணெயை கொள்முதல் செய்ய வேண்டும். பாமாயிலை விட தேங்காய் எண்ணெயை அதிகம் பயன்படுத்துவதற்கு ஏற்ப தென்னை விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

தேங்காய் விலை அவ்வப்போது வீழ்ச்சி அடைகிறது. இதற்கு காரணம் தேங்காய் வரத்து அதிகம், விளைச்சல் அதிகம் என கூறினாலும் தென்னை விவசாயிகளுக்கு உரிய விலை கிடைத்திட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும் வெளி மாநிலங்களில் இருந்து அதிக அளவில் தேங்காய் இறக்குமதி செய்யப்படுவதாலும் தேங்காய் விலை குறைந்துவிடுகிறது.

எனவே மத்திய மாநில அரசுகள் அந்தந்த மாநிலத்திற்கு ஏற்ப தேங்காயை இறக்குமதி செய்யவும், தேங்காய் விலை குறையும் போது தேங்காய்க்கு உரிய விலை கிடைக்கவும், கொப்பரைத் தேங்காய்க்கான கொள் முதல் விலையை அரசே நிர்ணயம் செய்யவும், தென்னை விவசாயிகள் நஷ்டம் அடையும் போது நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது தமிழ்நாட்டில் தென்னை விவசாயிகள் தேங்காய் விலை குறைந்துவிட்டதாகவும், நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்றும், தேங்காய்க்கு உரிய விலை கிடைக்கவும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.

எனவே தமிழக அரசு தென்னை விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

மேலும் தமிழக அரசு, தேர்தல் வாக்குறுதி 66 ல் கூறியபடி தென்னை நல வாரியத்தின் மூலம் அரசே தேங்காயை கொள்முதல் செய்து, விலையை நிர்ணயம் செய்து, தேங்காய் எண்ணையை கொள்முதல் செய்து, நியாய விலைக் கடைகளின் மூலம் விற்பனை செய்ய வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எஸ்.திவ்யா

Leave a Reply