என்சிசி மாணவர்களுக்கான ஒற்றைச்சாளர ஒருங்கிணைந்த மென்பொருளைப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்.

டிஜிட்டல் மயத்தைப் பிரபலப்படுத்தவதை நோக்கிய மிகப்பெரும் நடவடிக்கையாகவும்,  டிஜிட்டல் இந்தியா இயக்கத்திற்கு ஏற்பவும், என்சிசி மாணவர்களுக்கான ஒற்றைச்சாளர ஒருங்கிணைந்த மென்பொருளைப் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் இன்று (07.07.2023) புதுதில்லியில் தொடங்கிவைத்தார். ‘நுழைவு முதல் வெளியேறுதல் வரை’ என்ற மாதிரியில் வடிவமைக்கப்பட்டுள்ள என்சிசி மாணவர்களுக்கான  இந்த ஒற்றைச்சாளர தொடர்பு மென்பொருள், விண்வெளி பயன்பாடு மற்றும்  புவி தகவல்களுக்கான பாஸ்கராச்சாரியா நிறுவனத்தின் (பிசாக்) பங்களிப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது.

“ஒருமுறை என்சிசி மாணவர் எப்போதும் என்சிசி மாணவர்” என்ற பிரதமர் திரு நரேந்திர மோடி கண்ணோட்டத்தின் அடிப்படையிலான இந்த ஒருங்கிணைந்த மென்பொருள், ஒரு மாணவர் என்சிசியில் சேர்ந்தது முதல் அதிலிருந்து வெளியேறி முன்னாள் மாணவராகும் வரை அனைத்து நடைமுறைகளையும் டிஜிட்டல் மயமாக்கும். இதன் மூலம் தடையின்றி சான்றிதழ்கள் அளிக்க முடியும். அதுமட்டுமின்றி, வேலைவாய்ப்பின்போது, என்சிசி மாணவர்களின் தகவல் தளத்தை அனைத்து இந்திய அளவில் உருவாக்க முடியும்.

இந்த நிகழ்வின் போது, பாதுகாப்பு அமைச்சர் முன்னிலையில் தேசிய மாணவர் படை(என்சிசி)க்கும், பாரத ஸ்டேட் வங்கிக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, இவ்வங்கியின் ‘பஹ்லி உடான்’ திட்டத்தின் கீழ், என்சிசி மாணவர்கள் அனைவருக்கும் பணம் செலுத்தாமல் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு, அவர்களுக்கு ஏடிஎம் அட்டை, காசோலை, கணக்குப் புத்தகம் ஆகியவை வழங்கப்படும். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5 லட்சம் என்சிசி மாணவர்கள்  பயனடைவார்கள்.

இந்தநிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், டிஜிட்டல் மய முயற்சிக்காக என்சிசி, பிசாக், பாரத ஸ்டேட் வங்கி ஆகியவற்றை பாராட்டினார். இந்த நடவடிக்கை நாடு முழுவதும் உள்ள என்சிசி தொடர்பான தகவல்களை விரைந்து பெறுவதற்கு நிச்சயம் உதவும் என்று அவர் உறுதிபட தெரிவித்தார்.

பாதுகாப்புத்துறை செயலாளர் திரு கிரிதர் அரமானே, தேசிய மாணவர் படையின் தலைமை இயக்குநர் லெப்டினென்ட் ஜெனரல் குர்பீர்பால் சிங், பாதுகாப்பு அமைச்சகம், பிசாக் மற்றும் பாரத ஸ்டேட் வங்கியின் மூத்த அதிகாரிகள், என்சிசி மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

எம்.பிரபாகரன்

Leave a Reply