திருச்சியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமி ஆற்றிய 24 பக்கங்கள் கொண்ட உரையில், பக்கம்-3-ல் “திருச்சி மாவட்டத்திலுள்ள கல்லணை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், உண்மையிலுமே கல்லணை தஞ்சாவூர் மாவட்ட எல்லையில் உள்ளது. “திருச்சிக்கு மிக அருகாமையில் உள்ள கல்லணை” என்று குறிப்பிட்டு இருந்தால், மிக பொருத்தமாக இருந்திருக்கும்.
ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க அரசு விழாவில், ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் ஆற்றும் உரையில், இதுப்போன்ற தவறானத் தகவல்கள் இடம்பெறுவது வரலாற்றுப் பிழைக்கு வழி வகுத்துவிடும்.
தமிழக முதலமைச்சராக இருந்த ஜெ.ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, தமிழக அரசின் ஒவ்வொரு அசைவுகளையும், உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். நவீனத் தொழிட்நுட்பங்கள் அதற்கான வசதியையும், வாய்ப்பையும் மக்களுக்கு வழங்கியுள்ளது.
எனவே, வருங்கால தலைமுறையினருக்கு, ஒரு தவறான தகவலை தமிழக அரசே தந்து விடக் கூடாது.
அதிகாரிகள் மற்றும் அருகாமையில் இருப்பவர்கள் சொல்லும் அனைத்தையும் அப்படியே வேதவாக்காக கருதாமல்,
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு.-என்ற வள்ளுவப் பெருந்தகையின் வார்த்தைக்கு மதிப்பளித்து செயல்பட, தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமி முயற்சிக்க வேண்டும்.
ஏனென்றால், கும்பிடுகிற கையிலும் கூரிய வாள் இருக்கும். “எளிதில் நம்புகிறவன் எளிதில் ஏமாற்றப்படுவான்” என்ற பழமொழிதான் இப்போது என் நினைவிற்கு வருகிறது.
“நம்ப கூடாதவர்களை நம்புவதும்; நம்பிக்கைக்கு உரியவர்களை சந்தேகப்படுவதும் ஆபத்தைதான் உருவாக்கும்”.
அறிவாளிகளை அருகில் வைத்துக்கொள்ளாதவர்களும், அடிமைகளை தூரத்தில் வைத்துக்கொள்ளாதவர்களும் அவமானத்தையும், ஆபத்தையும் சந்தித்தே தீரவேண்டும்.
எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி எதிலும் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஏனென்றால், “எதிரி என்றைக்கும் எதிரிதான்; ஆனால், பரிசோதனைக்கு உட்பட வேண்டியது உறவுகளும், நட்புகளுமே”
இது தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு மட்டுமல்ல; பொதுவாக எல்லா மனிதர்களுக்குமே இது பொருந்தும்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com
9368PDIPR-P.R.No.716-Hon_bleCMSpeechandAnnouncement-MGRNootranduVizha–TrichyDistrict-Date26.10.2017
