சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் 2 நாள் மாநாடு இன்று தொடங்கியது. மாநாட்டை தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:–
வரலாற்று சிறப்புமிக்க சென்னை, முதன் முதலாக உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்துகிறது. மாநாட்டிற்கு வருகை தந்துள்ள முதலீட்டாளர்கள், தூதர்களை வரவேற்கிறேன்.
15 நாடுகளில் இருந்து ஆயிரம் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். நாடு முழுவதும் இருந்து 4 ஆயிரம் பேர் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.
தமிழகத்தை அனைத்து துறைகளிலும் இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாற்றுவதே இந்த அரசின் நோக்கம்.
மற்ற மாநிலங்களை விட சேவைத் துறையில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. வளர்ச்சியில் தேசிய சராசரியில் தமிழகம் 1½ மடங்கு கூடுதலாக உள்ளது.
வாகன உற்பத்தி துறையில் தேசிய மையமாக தமிழகம் விளங்குகிறது. அன்னிய முதலீட்டை ஈர்ப்பதில் 3–வது இடத்தை வகிக்கிறது.
தமிழகத்தில் நிலவிய மின்சார பற்றாக்குறை முழுவதுமாக நீக்கப்பட்டு மின்மிகை மாநிலமாக திகழ்கிறது. நாட்டிலேயே அதிக சூரிய ஒளி மின்உற்பத்தி மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.
வர்த்தகத்தில் ஆதரவான சூழலுடன் தமிழகம் உள்ளது. அனைவரையும் உள்ளிடக்கிய வளர்ச்சியை பெற்றுள்ளது.
சிறு–குறு தொழில்கள் தொடங்குவது அதிகரித்து வருகிறது. சிறு–குறு தொழில்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது.
பொருளாதார வளர்ச்சிக்கான அனைத்து வசதிகளையும் தமிழ்நாடு கொண்டுள்ளது. தமிழ்நாடு அறிவுசார் மாநிலமாக விளங்குகிறது.
அசோசெம் ஆய்வில் தமிழகம் சிறப்பான இடத்தை பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களில் தொழில் தொடங்கும் முதலீட்டாளர்களுக்கு சிறப்பு சலுகை அளிக்கப்படுகிறது. தென் மாவட்டங்களில் முதலீடு செய்வோருக்கு வரிச்சலுகை மற்றும் ஊக்கமளிக்கப்படுகிறது.
தொழில் தொடங்குவதற்கான அனுமதி 30 நாட்களுக்குள் வழங்கப்படும். புதிய தொழில் தொடங்குவதற்காக 42 ஆயிரம் ஏக்கர் நிலம் தமிழகத்தில் தயாராக உள்ளது.
காஞ்சீபுரம் மாவட்டம் வல்லம் வடகாலில்யமகா தொழிற்சாலை உற்பத்தியை தொடங்க உள்ளது.
ரூ.1 லட்சம் கோடியை தாண்டி முதலீடுகள் வந்துள்ளன. நாளை இது மேலும் அதிகரிக்கும். தமிழகத்தில் செய்யப்படும் முதலீடு லாபகரமாக இருக்கும் என உறுதி அளிக்கிறேன். 24 கருத்தரங்குகள் இந்த மாநாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சுற்றுலா பயணிகளை கவர்வதில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது. சேவைத் துறையில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் 2–ம் இடத்துக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது.
அறிவுசார் துறையில் தமிழகம் முதல் மாநிலமாக விளங்குகிறது. கட்டிட கூரைகளில் மின் உற்பத்தி செய்வதில் நாட்டிலேயே தமிழகம் முதலிடம் வகிக்கிறது.
1992–ல் நான் வகுத்து தொழில் கொள்கையில் தற்போது பலன் ஏற்பட்டுள்ளது. 2023–ல் தமிழ் நாட்டில் தனி நபர் வருமானம் முன்னேறிய நாட்டு மக்களுக்கு இணையாக உயரும்.
ரூ. 2,568 கோடியில் 3 மிகப்பெரிய திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
எனவே, தமிழ்நாட்டுடன் இணைந்து தொழில் தொடங்க வெளிநாட்டினருக்கு நான் அழைப்பு விடுக்கிறேன். இவ்வாறு தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா பேசினார்.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com
