பேரறிஞர் அண்ணா சொன்ன அமுதமொழி இன்று மீண்டும் நிரூபிக்கப்பட்டு இருக்கிறது: ஆர்.கே.நகர் வெற்றி குறித்து, தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அறிக்கை!

jayalalithaa

தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா ஆர்.கே.நகர் வெற்றி குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அன்பு என்பது பிறரை நேசிக்கச் செய்யும் பண்பு, அந்த நேசப் பண்பு அனைவரையும் அரவணைக்கும் பாசப் பண்பு. இந்த அன்பை நான் தமிழக மக்களிடத்தில் வைத்து இருக்கிறேன். அவர்களும் என் மீது வைத்து இருக்கிறார்கள். அதனால்தான், என்னுடைய அன்பான வேண்டுகோளினை ஏற்று, இந்த இடைத்தேர்தலில் என்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்து இருக்கிறார்கள் எனது அன்புக்குரிய டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி வாக்காளப் பெருமக்கள்.

என்னுடைய வார்த்தைக்கு மதிப்பளித்து, என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து, 2016-ம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கு முன்னோட்டமாக நடைபெற்ற இந்த இடைத்தேர்தலில், என்னை மகத்தான வெற்றி பெறச் செய்த எனது அன்பார்ந்த டாக்டர் ராதா கிருஷ்ணன் நகர் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த இடைத் தேர்தல் வெற்றியின் மூலம், ‘‘மக்கள் சக்தியை மட்டும் மூலதனமாகக் கொண்ட இயக்கங்கள் மட்டுமே இன்று உருக்குலையாமல், துருப்பிடிக்காமல், தேய்ந்து விடாமல், மாய்ந்து விடாமல் அசைக்க ஒண்ணாத கோட்டை கொத்தளமாகப் புத்தொளி வீசுகிறது’’ என்று பேரறிஞர் அண்ணா அன்று சொன்ன அமுதமொழி இன்று மீண்டும் நிரூபிக்கப்பட்டு இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. 

வாக்காளப் பெருமக்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு ஏற்ப, அவர்களின் எதிர்ப்பார்ப்புகளை, தேவைகளை, வசதிகளை நிறைவேற்றித் தர தொடர்ந்து அயராது பாடுபடுவேன் என்ற உறுதியை நான் இந்தத் தருணத்தில் அளிக்கிறேன்.

எனக்காக தேர்தல் பணியாற்றிய கழக நிர்வாகிகளுக்கும், என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகளுக்கும் மற்றும் தோழமைக் கட்சிகளின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

-ஆர்.அருண்கேசவன்.