2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் குறைந்த வாக்குகள் பதிவான மாவட்டங்களின் உயர் அதிகாரிகளின் மாநாட்டை தேர்தல் ஆணையம் நடத்தியது .

2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் குறைந்த அளவு வாக்குகள் பதிவான தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டங்களின் தேர்தல் அதிகாரிகளுடனான மாநாட்டை தேர்தல் ஆணையம் இன்று புதுதில்லியில் உள்ள தனது அலுவலகத்தில் நடத்தியது. பீகார், உத்தரப்பிரதேசம், தில்லி, மகாராஷ்டிரா, உத்தராகண்ட், தெலங்கானா, குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர், ஜார்கண்ட் ஆகிய 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2019 மக்களவைத் தேர்தலின் போது தேசிய சராசரியான 67.40 சதவீதத்தை விட குறைவாக வாக்குகள் பதிவானது.

இந்த மாநிலங்களைச் சேர்ந்த 50 கிராமப்புற மக்களவைத் தொகுதிகளில் 22 தொகுதிகள் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவை ஆகும்.

இன்று நடைபெற்ற  மாநாட்டுக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ராஜீவ் குமார் தலைமை வகித்தார். தேர்தல் ஆணையர்கள் திரு கியானேஷ் குமார், திரு சுக்பீர் சிங் சந்து ஆகியோர்  மாநாட்டில் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டின் போது வாக்காளர்களுக்கான கையேடு ஒன்று வெளியிடப்பட்டது.

இந்த மாநாட்டில் உரையாற்றிய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மொத்தம் 266 நாடாளுமன்றத் தொகுதிகளில், கடந்த தேர்தலின் போது குறைந்த அளவு வாக்குகள் பதிவானது கண்டறியப்பட்டுள்ளது என்று கூறினார். இத்தகைய தொகுதிகளில் வாக்குப்பதிவு சதவீதத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை  ஆராயுமாறு தலைமைத் தேர்தல் ஆணையர் வலியுறுத்தினார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply