தமிழக மீனவர்களையும், படகுகளையும் மீட்கவும் மத்திய அரசு உரிய பேச்சுவார்த்தையை இலங்கை அரசிடம் மேற்கொள்ள வேண்டும்!-ஜி.கே.வாசன்‌ வலியுறுத்தல்.

தமிழகத்தைச் சேர்ந்த நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதும், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 23 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துச் சென்றதும் மிகவும் கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தைச் சேர்ந்த நாகை மாவட்ட மீனவர்கள் மீது இலங்கையைச் சேர்ந்த கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதும், ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 23 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துச் சென்றதும், படகுகளை பறிமுதல் செய்ததும் மிகவும் கண்டிக்கத்தக்கது.

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுத்துறையை சேர்ந்த 5 மீனவர்கள் 2 படகுகளில் நேற்று முன் தினம் நள்ளிரவில் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி, ஜி.பி.எஸ் கருவி, வாக்கி டாக்கி, செல்போன்கள், படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை பறித்துச் சென்றதால் மீனவர்கள் காயமடைந்ததோடு மிகப்பெரிய அளவில் நஷ்டம் அடைந்துள்ளனர். இதனால் மீனவக்குடும்பங்கள் கவலை அடைந்துள்ளனர்.

அதே போல நேற்று நள்ளிரவில் நடுக்கடலில் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 23 பேர் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துச் சென்றனர்.

இப்படி கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்கொள்ளையர்களாலும், இலங்கை கடற்படையினராலும் பாதிக்கப்பட்டுள்ளதால் கடலோர மீனவர்கள் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளனர்.

தொடர்ந்து தமிழக மீனவர்கள் இலங்கை கடற்கொள்ளையர்களாலும், இலங்கை கடற்படையினராலும் பாதிக்கப்படுவது நீடிக்கிறது. இந்நிலை நீடிக்காமல் இருந்தால் தான் தமிழக மீனவர்களின் மீன்பிடித்தொழில் பாதிக்கப்படாது.

எனவே தமிழக அரசு, தமிழக மீனவர்களின் பாதுகாப்பான மீன்பிடித்தொழிலுக்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் மத்திய அரசு நாகை மாவட்ட மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், மீனவர்கள் அடைந்த நஷ்டத்தை ஈடு செய்யும் வகையில் இழப்பீட்டுத் தொகையை பெற்றுத்தரவும், சிறைப்பிடிக்கப்பட்டுள்ள ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 23 மீனவர்களை, மீனவர்களின் படகுகளை மீட்கவும் உடனடியாக இலங்கை அரசிடம் பேச்சுவார்த்தை மேற்கொள்ள வேண்டும்.

மத்திய மாநில அரசுகள் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு மீனவக்குடும்பங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சி.கார்த்திகேயன்

Leave a Reply