லக்னோவில் உள்ள இந்தியத் தகவல் தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐஐடி) 2 வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (டிசம்பர் 12, 2023) கலந்து கொண்டு உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர், இந்தியாவில் இன்று தேவை, மக்கள்தொகை, ஜனநாயகம், விருப்பம், கனவு ஆகிய 5 அம்சங்கள் உள்ளதாகக் கூறினார். இவை நமது வளர்ச்சிப் பயணத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும், பத்தாண்டுகளுக்கு முன்பு 11-வது இடத்தில் இருந்த நமது நாட்டின் பொருளாதாரம், இன்று 5-வது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளதாகத் தெரிவித்தார். 2030-ம் ஆண்டில் 3-வது பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும் பாதையில் இந்தியா சென்று கொண்டிருப்பதாக அவர் கூறினார். இந்தியா ஒரு முற்போக்கான, ஜனநாயக நாடு என்று தெரிவித்த அவர், 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்பதே நமது கனவு என்று குறிப்பிட்டார். ஐ.ஐ.ஐ.டி லக்னோவின் அனைத்து மாணவர்களும் இந்தத் தொலைநோக்குப் பார்வையில் ஒரு பங்கேற்பாளராக மாறுவது மட்டுமல்லாமல், அதை நிறைவேற்ற தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டிய பொறுப்பு உள்ளதாக அவர் தெரிவித்தார்.
மாற்றம் என்பது இயற்கையின் நியதி என்று குறிப்பிட்ட குடியரசுத் தலைவர், 4-வது தொழிற்புரட்சியின் தொடக்கத்தை நாம் காண்கிறோம் என்றும், செயற்கை நுண்ணறிவு மனித வாழ்க்கையை எளிதாக்குவதற்கும், உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கும் ஒரு முக்கியமான கருவியாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். பரந்த பயன்பாடுகளுடன், செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் ஏறத்தாழ நம் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் இடம்பெறுவதாகக் குறிப்பிட்டார். சுகாதாரம், கல்வி, வேளாண்மை, பொலிவுறு நகரங்கள், உள்கட்டமைப்பு, பொலிவுறு இயக்கம், போக்குவரத்து போன்ற அனைத்துத் துறைகளிலும், செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் ஆகியவை நமது செயல்திறன் மற்றும் வேலைத் திறனைப் பெரிய அளவில் மேம்படுத்த பல வாய்ப்புகளை வழங்குவதாக அவர் கூறினார்.
திவாஹர்