குஜராத்தின் பரூச் பகுதியைச் சேர்ந்த வி.பி.எஸ்.ஒய் பயனாளியான ஐ.டி.ஐ சான்றிதழ் பெற்ற விவசாயி அல்பேஷ்பாய் சந்துபாய் நிஜாமாவுடன் பிரதமர் நரேந்திர மோதி கலந்துரையாடினார்.

“படித்த இளைஞர்கள் விவசாயத்தில் நுழைவது விவசாயிகளுக்கு வயல்களில் இருந்து சந்தை வரை சிறந்த சூழலை வழங்குவதற்கான தீர்மானத்திற்கு வலு சேர்க்கிறது: பிரதமர்”

வெளியிடப்பட்டது: 09 டிசம்பர் 2023 3:05 பிற்பகல் பிஐபி டெல்லி

வளர்ச்சியடைந்த பாரதம் சபத யாத்திரை (வி.பி.எஸ்.ஒய்) பயனாளிகளுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலி  மூலம் கலந்துரையாடினார். வளர்ச்சியடைந்த பாரதம் சபத யாத்திரை, அரசின் முக்கிய திட்டங்களின் பலன்கள் உரிய காலத்தில் அனைத்து இலக்கு பயனாளிகளையும் சென்றடைவதை உறுதி செய்வதன் மூலம் அரசின் முக்கிய திட்டங்களின் செறிவூட்டலை அடைவதற்காக நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குஜராத்தின் பரூச் பகுதியைச் சேர்ந்த வி.பி.எஸ்.ஒய் பயனாளியான ஐ.டி.ஐ சான்இதழ் பெற்ற  விவசாயியும், வன்பொருள் பொறியியலில் டிப்ளமோ படித்தவருமான திரு அல்பேஷ்பாய் சந்துபாய் நிஜாமாவுடன் கலந்துரையாடிய பிரதமர், விவசாயத் துறையில் சேருவதற்கான அவரது முடிவு குறித்து விசாரித்தார். அதற்கு பதிலளித்த அல்பேஷ்பாய், தனது வேலையை விட்டுவிட்டு தனது மூதாதையர் நிலமான 40 ஏக்கர் நிலத்தில் விவசாயியாக மாற முடிவு செய்ததாக கூறினார். மத்திய, மாநில அரசுகளின் சலுகைகளைப் பெற்று, மானிய விலையில் விவசாய உபகரணங்களை வாங்கியதாக, பிரதமரிடம் தெரிவித்தார். மேலும் சொட்டுநீர் பாசனத்திற்கு ரூ.3 லட்சம் மானியம் பெற்றதாகவும் அவர் கூறினார். “உங்க வயசுல எனக்கு லட்ச ரூபாய் எப்படி இருக்கும்னு தெரியாது , நீங்க லட்சங்களைப் பற்றிப் பேசுறீங்க. இதுதான் மாற்றம்” என்று பிரதமர் கூறினார்.

அல்பேஷ்பாய் பெற்ற மானியங்கள் குறித்து திருப்தி தெரிவித்த பிரதமர், சமீபத்திய விவசாய நுட்பங்கள் மற்றும் நவீன உபகரணங்கள் குறித்து சக விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்குமாறு வலியுறுத்தினார். 2008 ஆம் ஆண்டு முதல் அட்மா (வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை)  திட்டங்களுடன் தனது தொடர்பு குறித்து திரு அல்பேஷ்பாய் பேசினார். அங்கு அவர் மற்ற பிராந்தியங்கள் மற்றும் மாநிலங்களின் விவசாய நுட்பங்களைப் பற்றிய அறிவைப் பெற்றார். பரூச்சில் பிரதமர் முன்னிலையில் அட்மாவால் ‘சிறந்த விவசாயி விருது’ பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.

பின்னணியில் அவரது மகளின் சிரித்த முகத்தைக் கவனித்த பிரதமர், அவருடன் உரையாடி, ‘பாரத் மாதா கி ஜெய்’ கோஷத்திற்கு தலைமை தாங்குமாறு கேட்டுக்கொண்டார். இதனால், ஒட்டுமொத்த கூட்டத்தினரும் ஆரவாரம் செய்து, பிரதமருக்கு அளவற்ற மகிழ்ச்சியை அளித்தனர்.

திரு அல்பேஷ்பாய் போன்றவர்கள் விவசாயத்தின் பக்கம் திரும்பும் இளைஞர்களுக்கு உத்வேகம் அளிப்பவர்கள் என்று குறிப்பிட்ட பிரதமர், நவீன தொழில்நுட்பங்கள், கண்டுபிடிப்புகள் மற்றும் புதிய சிந்தனையுடன் வயல்களில் இருந்து சந்தைக்கு  சிறந்த சூழலை வழங்குவதாக அவர் விவசாயிகளுக்கு உறுதியளித்தார். “படித்த இளைஞர்கள் விவசாயத்தில் நுழைவது இந்தத் தீர்மானத்திற்கு வலு சேர்க்கிறது”, என்று அவர் மேலும் கூறினார். விவசாயத்தில் ட்ரோன்களைப் பயன்படுத்துவதைப் பார்க்குமாறு விவசாயிகளை பிரதமர் ஊக்குவித்தார். அடுத்த 5 கிராமங்களில் ‘மோடியின் உத்தரவாதம் ‘ வாகனத்திற்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க விவசாயிகள் தயாராக வேண்டும் என்றும் திரு.மோடி கேட்டுக் கொண்டார்.

திவாஹர்

Leave a Reply