லக்ஷ்மிபத் சிங்கானியா – ஐஐஎம் லக்னோ தேசிய தலைமை விருதுகளைக் குடியரசுத்தலைவர் வழங்கினார்.

லக்ஷ்மிபத் சிங்கானியா – ஐஐஎம் லக்னோ தேசிய தலைமைத்துவ விருதுகளைக் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு  இன்று (டிசம்பர் 7, 2023) புதுதில்லியில்  வழங்கினார் .

இந்த நிகழ்வில் உரையாற்றிய குடியரசுத்தலைவர், உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்குக்  கண்மூடித்தனமான போட்டி மனிதகுலத்திற்கு தீங்கு விளைவிப்பதாகக் குறிப்பிட்டார். பருவநிலை மாற்றமும்  சுற்றுச்சூழல் சீர்குலைவுகளும் இதன் விளைவாகும். இன்று உலகமே இந்தச் சவாலை எதிர்கொண்டு வருகிறது. லாபத்தை அதிகப்படுத்துதல் என்ற கருத்தாக்கம் மேற்கத்திய கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம், ஆனால் இந்தியக் கலாச்சாரத்தில் இந்தக் கருத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை. ஆனால் இந்தியக் கலாச்சாரத்தில் தொழில் முனைவோருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

இளைஞர்கள் சுயதொழில் கலாச்சாரத்தை பின்பற்றுவது குறித்து  குடியரசுத் தலைவர் மகிழ்ச்சி தெரிவித்தார். உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட்அப் சூழல் அமைப்பாக இந்தியா திகழ்கிறது என்று அவர் கூறினார். உலகின் சிறந்த யூனிகார்ன் மையங்களில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது. நமது நாட்டு இளைஞர்களின் தொழில்நுட்ப அறிவுக்கு அப்பாற்பட்டு அவர்களின் நிர்வாகத் திறன் மற்றும் வணிகத் தலைமைக்கு இது ஓர் எடுத்துக்காட்டு. உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் இந்திய இளைஞர்கள் தலைமை தாங்குகிறார்கள் என்று அவர் கூறினார்.

திவாஹர்

Leave a Reply