தமிழக அரசு இனியும் பொறுமை காக்காமல் தமிழகத்துக்கு உரிய காவிரி நீரைப் பெற்றுத்தர உறுதியான செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும்!- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.

தமிழக அரசு. மேகதாது அணை விவகாரத்தில் மெத்தனப்போக்கை கடைபிடிக்காமல் உறுதியான செயல்பாட்டை மேற்கொண்டு தமிழகத்துக்கு உரிய காவிரி நீரைப் பெற வேண்டும்.

மேகதாது அணை மற்றும் காவிரி நீர் சம்பந்தமான பிரச்சனை ஆகியவற்றில் தொடர்ந்து காங்கிரஸ் தலைமையிலான கர்நாடக அரசின்
துணை முதல்வரின் உறுதியான பேச்சும் செயல்பாடும் தமிழக விவசாயிகளை குறிப்பாக டெல்டா மாவட்ட விவசாயிகளை அச்சுறுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக துணை முதல்வரின் பேச்சை த.மா.கா சார்பில் கண்டிக்கிறேன்.

தமிழக தி.மு.க அரசு அதன் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியையும், அவர்கள் கலந்து கொள்ளும் கூட்டம் கர்நாடகாவில் நடைபெறுவதையும் கவனத்தில் கொண்டு, மேகதாது அணை விவகாரத்தை கண்டும் காணாமல் இருப்பது தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் செயலாகும். இது மிகவும் வேதனைக்குரியது.

குறிப்பாக தமிழக தி.மு.க அரசு, தமிழ்நாட்டு விவசாயிகளின் நலன் மற்றும் தமிழ்நாட்டுக்கு உரிய காவிரி நீர் ஆகியவற்றில் அக்கறை கொண்டிருந்தால் இந்நேரம் கர்நாடக துணை முதல்வரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட உடனடி செயல்பாட்டை மேற்கொண்டிருக்க வேண்டும்.

எனவே தமிழக அரசு கூட்டணி தர்மம், கர்நாடகாவில் நடைபெற இருக்கும் தி.மு.க. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கலந்து கொள்ளும் கூட்டம் ஆகியவற்றை தாண்டி மேகதாது அணை, காவிரி நீர் ஆகியவற்றில் தமிழக மக்கள் மற்றும் தமிழ்நாடு தான் முக்கியம் என்பதை உறுதி செய்து கொண்டு, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என்று த.மா.கா சார்பில் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எஸ்.திவ்யா

Leave a Reply