அ.தி.மு.க, த.மா.கா, பா.ஜ.க – கூட்டணியைப் பொறுத்துக்கொள்ள முடியாத தி.மு.க வின் காழ்ப்புணர்ச்சி அரசியல்!-தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கருத்து.

தி.மு.க வின் அமைச்சர் திரு. செந்தில் பாலாஜி அவர்கள் கடந்த கால ஆட்சியில் கையூட்டு வாங்கிய குற்றச்சாட்டுக்காக அமலாக்கத்துறையினர் விசாரணை செய்து, சோதனை நடத்தி அதன் அடிப்படையில் அவர் கைதும் செய்யப்பட்டது சட்டத்திற்கு உட்பட்டதே.

உடல்நலக் குறைவு என்று கூறி அவர் இப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது தான் செய்தி

தவறு செய்பவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கக்கூடிய, குற்றவாளிகளை நிரபராதி ஆக்கக்கூடிய கட்சியாக தி.மு.க அரசு தொடர்ந்து பொய்யான, தவறான செய்திகளை கூறி மக்களை திசை திருப்ப நினைக்கிறது. அதன் தொடர்ச்சியாகவே இன்றைக்கு தி.மு.க வினுடைய அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அவர்களின் பேட்டி அமைந்துள்ளது.

மத்தியில் பா.ஜ.க மற்றும் தமிழகத்தில் அ.தி.மு.க, த.மா.கா கூட்டணியை பொறுத்துக்கொள்ள முடியாமல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மாநிலங்களவை தேர்தல் குறித்து குறிப்பாக த.மா.கா விற்கு மாநிலங்களவை உறுப்பினரை அ.தி.மு.க ஒதுக்கியது பா.ஜ.க வின் வற்புறுத்தலால் என்ற பொய்யான செய்தியை கூறியிருக்கிறார் தி.மு.க வின் அமைப்புச் செயலாளர்.

எந்தக்கட்சிக்கு சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறதோ அந்த கட்சியானது கூட்டணிக் கட்சிக்கு ஒத்த கருத்தோடு மாநிலங்களவை உறுப்பினரை ஒதுக்குவது தமிழக அரசியலில் புதிதல்ல. அந்த வகையில் தான் கூட்டணிக் கட்சியான த.மா.கா வுக்கு அ.தி.மு.க வானது மாநிலங்களவை உறுப்பினரை ஒதுக்கியது.

அதைக்கூட தெரியாதவராக தி.மு.க வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி பேசியது ஆச்சரியம்.
அப்படி என்றால் தொடர்ந்து தி.மு.க கூட்டணியில் அவர்களின் கூட்டணிக் கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினரை ஒதுக்கியது தி.மு.க வின் கூட்டணிக் கட்சிகளின் அழுத்தத்தின் பேரில் என்று எடுத்துக்கொள்ளலாமா.

எனவே சட்டத்தின் முன் ஆதாரங்களின் மூலம் கைது செய்யப்பட்ட ஒரு அமைச்சரை காப்பாற்றுவதற்காக தி.மு.க வின் அமைப்புச் செயலாளர் பொய்யான செய்தியைச் சொல்லி உண்மையை மறைக்க முயற்சிப்பதும், மக்களை குழப்ப நினைப்பதும் தமிழக மக்களிடம் எடுபடாது.

எனவே தமிழக தி.மு.க ஆட்சியாளர்கள், உண்மைநிலையை மக்களிடம் எடுத்துக்கூறாமல், குற்றத்தை மறைக்க, தப்பிக்க நினைத்து ஏதேதோ பேசி தவறான செய்தியை வெளியிட்டு மக்கள் மன்றத்தில் இருந்தும், வழக்கின் விசாரணையில் இருந்தும், சட்டத்தின் பிடியில் இருந்தும் தப்பிவிடலாம் என்றால் அது ஜனநாயகத்தில் எடுபடாது. நீதியும், நியாயமும், சட்டமும் வெல்ல வேண்டும் என்பது தான் த.மா.கா வின் எதிர்பார்ப்பாகும்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சி.கார்த்திகேயன்

Leave a Reply