மற்றவர்கள் நம்மை அளவிட அனுமதிக்க முடியாது – குடியரசு துணைத் தலைவர்.

நாட்டிற்குள்ளும், வெளியிலும் உள்ளவர்கள் நம்மை அளவிட முயற்சிப்பதாகக் குறிப்பிட்ட குடியரசுத் துணைத்தலைவர் திரு.ஜெகதீப் தன்கர் , உலகின் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் நல்லிணக்கத்தை இந்தியா நம்புவதால், நம் நாட்டின் எழுச்சி சில பகுதிகளில் ஜீரணிக்க முடியாததாக உள்ளதெனக் கூறினார்.

தேசத்தின் மீது அக்கறை இல்லாத சில நபர்கள் நமது நாட்டை களங்கப்படுத்துவதோடு குறுகிய பார்வை கொண்டிருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். “இந்தியா வளர்ச்சி பெறவில்லை என்று கூறுவது அடிப்படை யதார்த்தத்தை புறக்கணிப்பதாகும். மக்களின் திருப்தி மற்றும் அவர்களின் வாழ்க்கை மேம்பாடு ஆகியவற்றில் எங்களின் எழுச்சி தெளிவாகத் தெரிகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.

இந்தியப் பாதுகாப்பு சேவை பயிற்சி பெறுவோருடன் உரையாடிய திரு.தன்கர், டிஜிட்டல் பரிவர்த்தனைகள், இணையப் பயன்பாடு, உள்கட்டமைப்பு மற்றும் உணவுப் பாதுகாப்பு போன்ற பல்வேறு துறைகளில் நாட்டின் பல சாதனைகளைப் பட்டியலிட்டார். சமீபத்தில் திறக்கப்பட்ட புதிய பாராளுமன்றக“ கட்டிடம் பற்றி குறிப்பிட்ட அவர், அனைத்து வசதிகளுடன் கூடிய இந்த பிரம்மாண்டமான கட்டடம் இரண்டரை ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டதாகக் கூறினார்.

சவால் அல்லது சோதனை எதுவாக இருந்தாலும், தேசத்தை எப்போதும் முதன்மையாக வைத்திருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். “நீங்கள் உயிர்வாழ வேண்டிய அளவிற்கு மட்டுமே பொருள் தேவை. அதையும் தாண்டி தாய்நாட்டிற்குச் சேவை செய்வதிலும், மற்றவருக்குச் சேவை செய்வதிலும் மனநிறைவு இருக்கிறது” என்று அவர் கூறினார்.

திவாஹர்

Leave a Reply