ஜம்மு-காஷ்மீரில் மத்திய பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தலைமையில் உலக பால் தின நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

உலக பால் தினத்தையொட்டி நாளை  (2023,ஜூன்1)  ஜம்மு-காஷ்மீரில் மத்திய பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம்  ரூபாலா தலைமையில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மத்திய கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையும், ஜம்மு-காஷ்மீர் அரசின் வேளாண் உற்பத்தித் துறையும் இணைந்து உலக பால் தின கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளன.

உலக பால் தின நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக  ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள எஸ்.கே.ஐ.சி.சி. மாநாட்டு மையத்தில் கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை சார்பில்  கோடைகால சந்திப்புக்கூட்டம் ஜூன் 1 மற்றும் 2ம் தேதிகளில் நடைபெற உள்ளது.

உலக பால் தினம், பாலின் ஊட்டச்சத்து மற்றும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கொண்டாடப்படுகிறது. பால் பண்ணையாளர்கள், பதப்படுத்துபவர்கள் மற்றும் நுகர்வோரின் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் நோக்கில் ஸ்ரீ நகரில் நடைபெற உள்ள கோடைகால சந்திப்புக் கூட்டத்தின் போது விவாதங்கள் மற்றும் கருத்து பரிமாற்றங்கள் நடைபெறும். இக்கூட்டத்தில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் எதிர்பார்ப்புகளின் அடிப்படையில் திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்படும். இந்த நிகழ்ச்சியில்  நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த  கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சர்களும், மாநிலங்களின் கால்நடைப் பராமரிப்புத் துறை அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர்.

தலைமை விருந்தினராக மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா பங்கேற்கிறார்.  ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, பால்வளத்துறை  இணை அமைச்சர்கள்  டாக்டர் சஞ்சீவ் குமார் பால்யன், டாக்டர் எல்.முருகன் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.

இந்த நிகழ்ச்சியின் போது, 2023-24 ஆம் ஆண்டிற்கான ஏ-ஹெல்ப் என்ற கால்நடைப் பராமரிப்புக்கான சிறப்புப் பயிற்சி இயக்கத்தையும், மத்திய அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா  தொடங்கி வைக்கிறார்.

திவாஹர்

Leave a Reply