சௌராஷ்டிரா தமிழ் சங்கமம்: ராஜ்கோட்டில் நடைபெறும் சிந்தனை முகாமில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்பு.

தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்கத்தின் முன்னோடி திட்டமான தொழில்நுட்ப ஜவுளிகள் குறித்து சிந்தனை முகாம் ஒன்றில் நடைபெறும் கருத்து பரிமாற்ற கூட்டத்தில் மத்திய வர்த்தகம், தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், மத்திய ஜவுளி மற்றும் ரயில்வே துறை இணையமைச்சர் திருமதி தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ் ஆகியோர் கலந்து கொள்வார்கள். சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் போது ஜவுளி துறையின் வளர்ச்சி வாய்ப்புகள் குறித்து குஜராத்தின் ராஜ்கோட்டில் ஏப்ரல் 21, 2023 அன்று இந்த அமர்வு நடைபெறும்.

சிந்தடிக் மற்றும் ரேயான் ஜவுளி ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சிலும், இந்திய தொழில்நுட்ப ஜவுளி சங்கமும் இணைந்து நடத்தும் இந்த அமர்வில் 50க்கும் மேற்பட்ட முன்னணி ஜவுளித்துறை நிறுவனங்கள் கலந்து கொள்ளும். தொழில்துறை தலைவர்கள், உற்பத்தியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், மத்திய மற்றும் மாநில அரசுகளின் பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு ஜவுளித் துறையின் எதிர்கால வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வார்கள்.

செயற்கை இழைகளுக்கான ஜவுளி ஆலோசனைக் குழுவின் இரண்டாவது கூட்டத்திற்கு அமைச்சர் திரு கோயல் தலைமையேற்று, செயற்கை இழைகளின் மதிப்பு சங்கிலியுடன் தொடர்புடைய பங்குதாரர்களுடன் ஆலோசனையில் ஈடுபடுவார். பருத்திக்கான ஜவுளி ஆலோசனைக் குழுவின் 6-வது கூட்டத்திற்கும் அவர் தலைமை தாங்குவார். மேலும் ஜவுளி துறையில் நிலைத்தன்மை மற்றும் சுழற்சிக்கான எதிர்கால திட்டம் என்ற அமர்விலும் அவர் உரையாற்றுவார். நிலைத்தன்மையை நோக்கிய பாதையில் தமிழ்நாடு மற்றும் குஜராத்தின் ஜவுளி துறைகள் முன்னோடியாகத் திகழ்கின்றன. தமது பயணத்தின் போது சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை முன்னிட்டு சோம்நாத்தில் நடைபெறும் கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்களின் கண்காட்சியையும் திரு பியூஷ் கோயல்  பார்வையிடுவார்.

தமிழ்நாடு மற்றும் குஜராத் மாநிலங்கள் இடையேயான கலாச்சார இணைப்பை கொண்டாடுவதற்காக குஜராத்தில் ஏப்ரல் 17 முதல் 30 வரை ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ முன்முயற்சியின் கீழ் ‘சௌராஷ்ட்ரா தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

எம்.பிரபாகரன்

Leave a Reply