இந்தியாவின் தலைமையில் ஜி20 அமைப்பின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் இரண்டாவது கூட்டம்.

உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் 2023 வசந்தகால கூட்டங்களை முன்னிட்டு இந்தியாவின் தலைமையில் ஜி20 அமைப்பின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் இரண்டாவது கூட்டம் ஏப்ரல் 12 மற்றும் 13-ஆம் தேதிகளில் நடைபெற்றது. மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் திரு சக்திகாந்த தாஸ் ஆகியோர் இந்தக் கூட்டத்திற்குத் தலைமை வகித்தார்கள். ஜி20 உறுப்பு நாடுகள், 13 சிறப்பு அழைப்பு நாடுகள் மற்றும் பல்வேறு சர்வதேச மற்றும் பிராந்திய நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 350 பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டனர்.

உலகளாவிய பொருளாதாரம், சர்வதேச நிதி கட்டமைப்பு, நிலையான நிதி, நிதித்துறை, நிதி உள்ளடக்கம் மற்றும் சர்வதேச வரிவிதிப்பு உள்ளிட்ட விசயங்கள் பற்றிய அமர்வுகள் நடைபெற்றன. பிப்ரவரி மாதம், நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் மற்றும் வழிகாட்டுதல்படி பல்வேறு குழுக்களின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்வதே இந்தக் கூட்டத்தின் நோக்கமாகும். 

உக்ரைன் போர், உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பின்மை, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட உலகளாவிய பொருளாதார சவால்கள் குறித்தும், நிதி நிலைத்தன்மைக்கான சமீபத்திய இடர்பாடுகள் குறித்தும் உலகளாவிய பொருளாதாரம் மற்றும் சர்வதேச நிதி கட்டமைப்பு அமர்வில் உறுப்பினர்கள் ஆலோசித்தார்கள். இந்தக் கூட்டத்தை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் பணிகள், காந்திநகரில் வரும் ஜூலை மாதம் நடைபெற உள்ள மூன்றாவது கூட்டத்திலும், அதைத் தொடர்ந்து செப்டம்பர் 8,9-ஆம் தேதிகளில் புதுதில்லியில் நடைபெற உள்ள தலைவர்களின் உச்சிமாநாட்டிலும் முன்வைக்கப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது.

திவாஹர்

Leave a Reply