வட இந்தியாவின் முதல் அணுமின் நிலையம் புதுதில்லிக்கு வடக்கே சுமார் 150 கிலோ மீட்டர் தொலைவில் ஹரியானாவில் உள்ள கோரக்பூரில் அமைக்கப்படுகிறது: மத்திய இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்.

வட இந்தியாவின் முதல் அணுமின் நிலையம், தேசிய தலைநகர் புது தில்லிக்கு வடக்கே சுமார் 150 கிலோ மீட்டர் தொலைவில் ஹரியானாவில் உள்ள கோரக்பூரில் அமைக்கப்படுகிறது.

இதை இன்று தெரிவித்த மத்திய அணுசக்தித் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், முன்பு பெரும்பாலும் தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் அல்லது நாட்டின் மேற்குப் பகுதியான மகாராஷ்டிரா போன்ற இடங்களில் மட்டுமே அணுமின் நிலையங்கள் அமைக்கப்பட்டதாகக் கூறினார்.

இந்தியாவின் அணுசக்தித் திறனை அதிகரிப்பதற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், கடந்த 8 ஆண்டுகளில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். 10 அணு உலைகளை நிறுவுவதற்கு ஒரே நேரத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்றும் அவர் கூறினார்.

கோரக்பூர் ஹரியானா அணு வித்யுத் பரியோஜனாவின் (GHAVP) இரண்டு அலகுகள் 700 மெகாவாட் திறன் கொண்டதாக முற்றிலும் உள்நாட்டு வடிவமைப்புடன் கூடிய அழுத்தப்பட்ட கனநீர் உலையுடன் (PHWR)  ஹரியானாவில் ஃபதேஹாபாத் மாவட்டத்தில் உள்ள கோரக்பூர் கிராமத்திற்கு அருகில் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்தார். இதற்கு ஒதுக்கப்பட்ட மொத்த நிதியான ரூ. 20,594 கோடியில் இதுவரை ரூ. 4,906 கோடி செலவிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். 

நாட்டின் எதிர்கால நம்பிக்கைக்குரிய துறையான இந்த அணுசக்தித் துறை, இந்தியாவின் ஆற்றல் தேவைகளைப் பூர்த்தி செய்யும் திறன் கொண்டது எனவும் அவர் கூறினார். அணுசக்தி ஆலைகளைத் திறப்பதற்கான ஆதாரங்களுக்காக, பொதுத்துறை நிறுவனங்களுடன் கூட்டு முயற்சிகளை உருவாக்க அணுசக்தித் துறை அனுமதி அளித்துள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

ஹரியானா உலைக்கான முக்கிய கட்டடங்கள், கட்டமைப்புகள், பாதுகாப்பு தொடர்பான பம்ப் ஹவுஸ் (SRPH), எரிபொருள் எண்ணெய் சேமிப்பு பகுதி-1 மற்றும் 2 (FOSA-1&2), காற்றோட்ட அடுக்கு, மேல்நிலை தொட்டி (OHT) போன்றவற்றுக்கான பணிகளில் நல்ல முன்னேற்றம் உள்ளது என அவர் குறப்பிட்டார். டர்பைன் கட்டடம் -1 மற்றும் 2, 220 கிலோ வாட் சுவிட்ச்யார்ட் மற்றும் ஐடிசிடி-1ஏ ஆகியவற்றுக்கான அடிப்படைப் பணிகள் முடிவுற்றுள்ளன என அவர் கூறினார்.  மற்ற பகுதிகளில் ஐடிசிடி-கள், 400 கேவி சுவிட்ச்யார்டு உள்ளிட்டவற்றின் அடிப்படைப் பணிகள் நடந்து வருவதாக அவர் தெழிவித்தார்.

முதன்மைக் குளிரூட்டி பம்புகள், கேலண்ட்ரியா, அணு உலை ஹெடர்கள், மாடரேட்டர் மற்றும் பிற டி20 வெப்பப் பரிமாற்றிகள் போன்ற முக்கிய உற்பத்தி உபகரணங்களுக்கான கொள்முதல் ஆணைகள் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார். எண்ட் ஷீல்டுகள் மற்றும் முதல் யூனிட்டுக்கான அனைத்து நீராவி ஜெனரேட்டர்களும் வாங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். மற்ற உபகரணங்களின் உற்பத்தி பல்வேறு நிலைகளில் உள்ளது என்றும் கட்டுமான தளத்துக்கு குறித்த நேரத்தில் அவை கொண்டு செல்லப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

ஹரியானா நீர்ப்பாசனம் மற்றும் நீர்வளத் துறை மூலம், குளிரூட்டுதலுக்கான நீர் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக நீர் குழாயின் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், இந்தப் பணிகளில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் திரு. ஜிதேந்திர சிங் கூறினார்.

Leave a Reply