இந்திய வெளியுறவுப் பணி துறையில் பயிற்சி பெற்ற அதிகாரிகள் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தனர்.

இந்திய வெளியுறவுத் துறையில் பயிற்சி பெற்ற அதிகாரிகள் குழுவினர்(2021 பிரிவு) இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தனர்.

அதிகாரிகளிடையே உரையாற்றிய குடியரசுத் தலைவர், புதியதொரு தன்னம்பிக்கையுடன் உலக அரங்கில் இந்தியா தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில், வெளியுறவுத் துறையில் உங்கள் பணிகளை தொடங்குவது மிகவும் உற்சாகமானதாக இருக்கும் என்று தெரிவித்தார். உலக நாடுகள் இந்தியாவை உற்று நோக்குவதாகவும், அண்மைக் காலங்களாக பிற நாடுகளுடனான இருதரப்பு மற்றும் பலதரப்பு உறவுகளில் புதிய முயற்சிகள் காணப்படுவதாகவும் குறிப்பிட்டார். உலகளாவிய பல்வேறு அமைப்புகளில் இந்தியா தீர்க்கமான தலைமைத்துவத்தை வெளிப்படுத்தியுள்ளது. பல்வேறு துறைகளில் இந்தியாவின் தலைமைத்துவம் சவால்களற்றதாக உள்ளது. தெற்குப் பகுதிகளின் வளர்ச்சியில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கிறது. மேலும் பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா முன்னணி நாடாக விளங்குவதாக கூறினார்.

பொருளாதார செயல்திறன் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில், இந்தியா வலுவான நிலைக்கு முன்னேறி வருகிறது என்று தெரிவித்தார். பொருளாதாரத்தில் முன்னேறிய உலக நாடுகள் பெருந்தொற்றின் தாக்கத்திலிருந்து மீள்வதற்கு இன்னும் முயற்சி செய்து கொண்டுள்ள நிலையில், இந்தியா மீண்டெழுந்து முன்னேறத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக இந்தியப் பொருளாதாரம் வேகமான வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்து வருகிறது. உண்மையில், உலக பொருளாதார மீட்சி, இந்தியாவையே சார்ந்துள்ளது. உலக அரங்கில் இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு மற்றொரு காரணம் அதன் அணுகுமுறை. உலக நாடுகளுடனான நமது உறவுகள், மரபுசார்ந்த நமது மதிப்புகளால் நிர்வகிக்கப்படுகின்றன. இந்தியாவின் பெருமைமிகு நாகரீகம், பாரம்பரியம், கலாச்சாரம் ஆகியவற்றை உலக நாடுகளில் முன்னிறுத்த வெளியுறவுத் துறை உங்களுக்கு தனித்துவமான ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது” என்று தெரிவித்தார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply