தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது 97 பக்கங்கள் கொண்ட ஊழல் புகார்! -ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் வழங்கினார்.

தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள் மீது 97 பக்கங்கள் கொண்ட ஊழல் புகார் ஒன்றை, தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் வழங்கினார்.

தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமானக் குற்றச்சாட்டுகள் விபரம்:

  1. முதலமைச்சர் பழனிச்சாமி மீது தனது நெருங்கிய உறவினர்களுக்கு 6133.57 கோடி ரூபாய் மதிப்பிலான 6 நெடுஞ்சாலைத்துறை டெண்டர்களை கொடுத்தது; கொரோனா பேரிடர் காலத்தில் மத்திய அரசு கூடுதலாக வழங்கிய இலவச அரிசியை வெளி மார்க்கெட்டில் விற்று முறைகேடாக பணம் சம்பாதித்து அரசுக்கு 450 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியது; முதற்கட்டமாக 200.21 கோடி ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக தனது உறவினர்கள் மற்றும் பினாமிகள் பெயரில் 19 சொத்துக்களை வாங்கி குவித்தது.
  2. துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மீது “காக்னிஷன்ட்” கம்பெனி கட்டுமான அனுமதி ஊழல் உள்ளிட்ட வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்த ஊழல் புகார்.
  3. உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது 9 பினாமி கம்பெனிகளை வைத்து அதிக விலைக்கு கிராம ஊராட்சி மன்றங்களுக்கு எல்.இ.டி விளக்கு கொள்முதல் செய்து 875 கோடி ஊழல் புகார்.
  4. மின்வாரியத்துறை அமைச்சர் பி.தங்கமணி மீது நிலக்கரி இறக்குமதி , தரமற்ற நிலக்கரி வாங்கியது, போலி மின்சாரக் கணக்கில் ஊழல் உள்ளிட்ட 950.26 கோடி ரூபாய் ஊழல் புகார்.
  5. உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் கொரோனா பேரிடர் காலத்தில் மத்திய அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கிய இலவச அரசி மற்றும் வாங்கிய அரசியை வெளிமார்க்கெட்டில் விற்று முறைகேடாக பணம் சம்பாதித்தது குறித்த ஊழல் புகார்.
  6. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் மீது அரசு அதிகாரிகள் மாறுதல்கள் மற்றும் நியமனங்களுக்கா 20.75 கோடி ரூபாய் லஞ்சம் பெற்று வைத்திருந்த கவர்கள் வருமான வரித்துறையால் கைப்பற்றப்பட்டது; புதுக்கோட்டையில் கல் குவாரியில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமாக கல் வெட்டியெடுத்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி ஊழல் செய்தது உள்ளிட்ட ஊழல் புகார்கள்.
  7. வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மீது 1950 கோடி ரூபாய் பாரத் நெட் டெண்டர் ஊழல் புகார்.
  8. மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் மீது மீனவர்களுக்கு வாக்கி டாக்கி கொள்முதல் செய்ததில் 30 கோடி ரூபாய் ஊழல்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

-கே.பி.சுகுமார்.

Leave a Reply