மலைப்பிரதேசங்களில் மட்டுமே வாழக்கூடிய புதிய பல்லி இனம் ஏற்காட்டில் கண்டறியப்பட்டுள்ளது!

மலைப்பிரதேசங்களில் மட்டுமே வாழக்கூடிய பல்லி இனம் ஒன்று ஏற்காடு மலைப்பகுதியில் இன்று கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து அறிவியல் எழுத்தாளர் ஏற்காடு இளங்கோ கூறியதாவது:

“ பல்லி” – யைப் பற்றிய பல தவறான கருத்துகள் பொதுமக்களிடம் காணப்படுகிற்து.  உண்மையில் பல்லியானது நமக்கு நன்மை செய்யும் உயிரினமாகும். இது மக்களுக்கு தீங்கிழைக்கும் கொசுக்கள், பூச்சிகள், பூராண், கரப்பான் பூச்சி, தேள் ஆகியவற்றை பிடித்து உண்ணும் சிறிய பிராணியாகும். இது மிகவும் சாதுவான விலங்கு எனவும் கருதப்படுகிறது. இதனால் நமக்கு எந்த தீங்கும் ஏறப்படாது. அது நம்மை கடித்தால் நமக்கு ஏதும் நேராது. ஏனெனில் அதன் உடம்பில் விஷம் கிடையாது. ஏற்காட்டில் மட்டுமே வாழக்கூடிய ஒரு பல்லியை 2000 ஆம் ஆண்டில் தாஸ் மற்றும் பாயர் ஆகிய இருவரும் கண்டுபிடித்துள்ளனர். இந்த பல்லியானது முதன்முதலாக சேர்வராயன் மலையில் ஏற்காடு டவுண் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. அதனால் அதற்கு ஏற்காடு முழுநாள் பள்ளி (YERCAUD DAY GECKO) எனப் பெயரிட்டுள்ளனர் இதனை கண்டுபிடித்தவர்கள். இதன் விலங்கியல் பெயர் நீமாஸ்பைஸ் ஏற்காடியன்ஸ் (GNEMASPIS YERCAUDIENS) என்பதாகும்.

இந்த பல்லியானது கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1100 – 1500 மீட்டர் உயரத்தில் உள்ள  ஏற்காடு மலைப்பகுதியில் காணப்படுகிறது. பாறைகளிலும், மனிதர் வாழும் நிலப்பகுதிகளிலும் இவை வாழ்கின்றன. இது ஒரு சிறு பல்லி இனத்தை சார்ந்ததாக கருதப்படுகிறது. அமெரிக்கன் பிங்க் எனப்படும் அடர்ந்த செம்பழுப்பு நிறத்தில் உள்ள இந்த பல்லியின் நிறமானது புதுமையானதாகவும் பார்ப்பதற்கு விநோதமாகவும் உள்ளது. இதன் உடலில் பல்வேறு சிறு,சிறு திட்டுகள் வண்ணத்துடன் உள்ளது. அடர்ந்த நிறமும், வெளிறிய நிறமும் கொண்டுள்ளது. இதனை இரவு மற்றும் பகல் நேரங்களிலும் காணலாம். இது 3 – 6 செ.மீ. நீளமுடையது.

உலகளவில் முதன் முதலாக ஏற்காட்டில் கண்டுபிடிக்கப்பட்ட காரணத்தால் அதற்கு “ஏற்காடு பல்லி” என்று பெயரிட்டுள்ளனர் இதன் கண்டுபிடிப்பாளர்கள். இது ஒரு அரிய வகை பல்லியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2012 மற்றும் 2015 ஆண்டுகளில் கொல்லிமலை மற்றும் கல்வராயன் மலை ஆகியவற்றிலும் இது இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இது மிகவும் சாதுவான பல்லி.  ” இவ்வாறு கூறினார்.

-நவீன் குமார்.

Leave a Reply