நீதிபதியின் கன்னத்தில் பெண்கள் அறைய வேண்டும்: அச்சுதானந்தன் ஆவேசம்!

_VSகேரளா, இடுக்கி அருகே சூர்யநெல்லியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி, 1996ல் கடத்தப்பட்டு, பலரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இவ்வழக்கில், குற்றம் சாட்டப்பட்டு, கீழ்கோர்ட் தண்டனை அளித்த, 35 பேரை, 2005ல், கேரள ஐகோர்ட் விடுவித்தது. இவ்வழக்கை, மீண்டும் விசாரணை நடத்த, ஜனவரி, 31ம் தேதி, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

குற்றம்சாட்டப்பட்டவர்களை, 2005ல், விடுவித்த, “டிவிஷன் பெஞ்ச்’ நீதிபதிகளில் ஒருவரான, ஆர்.பசந்த், நேற்று முன்தினம், தன் நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தார். அவரது பேச்சை, தனியார், “டிவி’ நிருபர் குழு, ரகசியமாக படமெடுத்து ஒளிபரப்பியது. அதில், “சூரியநெல்லி மாணவி, பலாத்காரம் செய்யப்படவில்லை. அவள் சிறு வயதிலேயே விபச்சாரியாக இருந்தாள். அவளது விருப்பத்தின் பேரிலேயே, பலாத்காரம் நடந்தது. வழக்கில், 35 பேரை விடுவித்தது சரி தான். இதை, ஐகோர்ட் தீர்ப்பு முழுவதையும் படித்து பார்த்தாலே தெரியும்’ என, பேசுவதாக காட்சி அமைந்திருந்தது.

இதை பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து, மாநில முன்னாள் முதல்வரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான, அச்சுதானந்தன், பொது கூட்டத்தில் பேசியதாவது: பாதிக்கப்பட்ட மாணவிக்கு நடத்தப்பட்ட கொடூரத்தை, நீதிபதி நியாயப்படுத்துகிறார். குற்றவாளிகளை காப்பாற்றவும் சில நீதிபதிகள் உள்ளனர். ஆனால், அவர்களுக்கும் மேலே, சுப்ரீம் கோர்ட் உள்ளது.

குற்றவாளிகளை காப்பாற்றிய நீதிபதிக்கு, சில ரகசிய உதவிகள் கிடைத்துள்ளது. அவரது பேச்சு, சுப்ரீம் கோர்ட் நிலைப்பாட்டை கேலிக்குரியதாக்கி விட்டது. இதற்கு என்ன செய்யவேண்டும் என்றால், பத்து இளம் பெண்கள், அவரது ஒரு கன்னத்தை பிடித்துக் கொண்டு, மறு கன்னத்தில் அறைய வேண்டும். இவ்வாறு, அச்சுதானந்தன் பேசினார். இந்நிலையில், நீதிபதி, பசந்த், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க, தலசேரிக்கு சென்ற போது, அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

Leave a Reply