மத்திய பணியாளர் நலன் மற்றும் ஓய்வூதியத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கின் வழிகாட்டுதலின் பேரில், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களின் வாழ்க்கையை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டு, ஓய்வூதியக் கொள்கையிலும், ஓய்வூதியம் தொடர்பான செயல்முறைகளை டிஜிட்டல் மயமாக்குவதிலும் பல நலத்திட்டங்களை ஓய்வூதியத் துறை செயல்படுத்துகிறது.
ஓய்வூதியத்துறை அதிகாரிகளும் வங்கிகளும் ஓய்வூதியம் வழங்குவதில் முக்கியப் பங்கு வகிப்பதால் களப் பணியாளர்களுக்கான தொடர்ச்சியான விழிப்புணர்வு பயிலரங்கங்கள் நடத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, ஓய்வூதியத் துறையின் செயலாளர் திரு வி. சீனிவாஸ் தலைமையிலான மத்திய அரசு குழு, 2024 மார்ச் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் அகமதாபாத்தில் பாங்க் ஆப் பரோடா அதிகாரிகளுக்கு ஒரு பயிலரங்கை நடத்தவுள்ளது.
ஓய்வூதியம் தொடர்பான பல்வேறு விதிகள் மற்றும் நடைமுறைகள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் வாழ்க்கையை எளிதாக்குவதை உறுதி செய்ய மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த பயிலரங்குகளின் நோக்கமாகும். இந்த பயிலரங்கில் 70-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
எம்.பிரபாகரன்
