இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதியாக பதவி வகித்த தல்பீர் சிங் சுஹாக் (டிச.31,2016) ஓய்வுபெற்றார். இதைத் தொடர்ந்து, அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்ட விபின் ராவத் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரிடம் தனது பொறுப்புகளை தல்பீர் சிங் சுஹாக் ஒப்படைத்தார்.
இதேபோல்,விமானப்படையின் தலைமைத் தளபதியாக பதவி வகித்த அரூப் ராஹாவும் (டிச.31,2016) ஓய்வு பெற்றார். இதையடுத்து, விமானப்படையின் புதிய தலைமைத் தளபதியாக வீரேந்தர் சிங் தனோவா பதவியேற்றுக் கொண்டார்.
விபின் ராவத், இந்திய ராணுவத்தின் 27-ஆவது தலைமை தளபதி ஆவார். வீரேந்தர் சிங் தனோவா, விமானப்படையின் 25-ஆவது தலைமைத் தளபதி ஆவார்.
இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதியாக பதவியேற்றிருக்கும் விபின் ராவத்தை விட, கிழக்குப் பிராந்திய படைப்பிரிவு தளபதி பிரவீண் பக்ஷியும், தெற்குப் பிராந்திய படைப்பிரிவு தளபதி பி.எம். ஹாரிசும் சீனியாரிட்டி அடிப்படையில் மூத்தவர்கள். எனவே, ராணுவத் தலைமைத் தளபதி பதவிக்கு அவர்கள் இருவரில் ஒருவரை மத்திய அரசு நியமிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு முற்றிலும் மாறாக விபின் ராவத்தை தலைமைத் தளபதியாக மத்திய அரசு நியமித்து உள்ளது.
