பிரதமர் நரேந்திர மோதி, கொல்கத்தாவில் 12-வது சர்வதேச யோகா தின தேசிய கொண்டாட்டத்தில் பங்கேற்றார்

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (21.06.2026) கொல்கத்தாவின் ரெட் ரோட்டில் 12-வது சர்வதேச யோகா தின தேசிய கொண்டாட்டங்களில் பங்கேற்றார். ஆயிரக்கணக்கான யோகா பயிற்சியாளர்களுடன் பொது யோகா நெறிமுறை அமர்வில் அவர் பங்கேற்றார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு உலக மக்கள் அனைவருக்கும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். ஜூன் 21-ம் தேதி உலகின் பல பகுதிகளில் ஆண்டின் மிக நீண்ட நாளாகக் கொண்டாடப்படுவதாக அவர் கூறினார். யோகா, மனிதகுலத்தின் மிகப்பெரிய கூட்டு கொண்டாட்டங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

இமயமலை முதல் இந்தியப் பெருங்கடல் வரையிலும், வங்காளம், வடகிழக்கு முதல் மேற்கு சௌராஷ்டிரா பகுதி வரையிலும், ஒட்டுமொத்த தேசமும் யோகாவின் ஆற்றலால் புத்துணர்ச்சி பெறுவதாக அவர் கூறினார். இது யோகாவின் ஒன்றிணைக்கும் சக்தியைப் பிரதிபலிக்கிறது என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

மேற்கு வங்கத்தின் வளமான ஆன்மீக, கலாச்சார பாரம்பரியத்தின் காரணமாக, இங்கு யோகா தினத்தைக் கொண்டாடுவது சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்று பிரதமர் கூறினார். பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர் வாழ்ந்து போதித்த பூமி வங்காளம் என்பதையும், சுவாமி விவேகானந்தர் இந்தியாவின் ஆன்மீக ஞானத்தையும் யோகா மரபுகளையும் உலகிற்கு அறிமுகப்படுத்திய இடம் இது என்பதையும், அவர் நினைவு கூர்ந்தார். குருதேவ் ரவீந்திரநாத் தாகூரின் போதனைகளைக் குறிப்பிட்ட பிரதமர், நம்மைச் சுற்றியுள்ள உலகத்துடனான அர்த்தமுள்ள தொடர்புகளின் மூலமே உண்மையான மனித அடையாளம் உருவாகிறது என்றும், இதுவே யோகாவின் கொள்கை என்றும் கூறினார். மேலும், முழு வாழ்க்கையுமே யோகாதான் என்ற மகரிஷி அரவிந்தரின் நம்பிக்கையையும் அவர் மேற்கோள் காட்டினார். யோகா ஒருவரின் இயல்பின் ஒரு பகுதியாக மாறும்போது, அது மனித ஒற்றுமையின் அடித்தளத்தை வலுப்படுத்துகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். யோகா என்பது வெறும் உடற்பயிற்சி வடிவம் மட்டுமல்ல எனவும் அதை எந்தவொரு குறிப்பிட்ட வயதினருக்கும் கட்டுப்படுத்த முடியாது என்றும் அவர் கூறினார். அது மனித வாழ்வின் ஒவ்வொரு கட்டத்தையும் வளப்படுத்தும் உணர்வு எனவும், உயிர்சக்தி, உள் ஞானம் ஆகியவற்றின் ஊற்றாகும் என்றும் திரு நரேந்திர மோடி தெரிவித்தார். இந்த ஆண்டு சர்வதேச யோகா தினத்தின் கருப்பொருளான “ஆரோக்கியமான முதுமைக்கான யோகா” என்பதைக் குறிப்பிட்ட அவர், ஒருவர் வயதாகும்போதும் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும், ஆற்றலுடனும் இருப்பதற்கு, யோகா சிறந்த வழியாக அமைகிறது என்று அவர் கூறினார்.

ஆரோக்கியமான முதுமை என்பது, வயது கூடும்போது மனித ஆற்றல் குறைந்துவிடாமல் இருப்பதை உறுதி செய்வதாகும் என்று பிரதமர் கூறினார். யோகா, வாழ்நாள் முழுவதும் தொடர்ச்சியான வளர்ச்சியையும் சுய முன்னேற்றத்தையும் ஊக்குவிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். தனிநபர்கள், இருபது வயதில் இருந்ததை விட நாற்பது வயதில் அதிக நெகிழ்வுத்தன்மையுடனும், முப்பது வயதில் இருந்ததை விட ஐம்பது வயதில் அதிக ஆற்றலுடனும், ஐம்பது வயதில் இருந்ததை விட எழுபது வயதில் வாழ்க்கை முறை தொடர்பான நோய்களை எதிர்க்கும் திறனுடனும் இருக்க வேண்டும் என்ற விருப்பத்தை அவர் வெளிப்படுத்தினார். நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தவும், ஆற்றல் அளவைத் தக்கவைக்கவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும், மனநலத்தை மேம்படுத்தவும் யோகா உதவுவதோடு, வாழ்க்கை முறை நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது என்று அவர் குறிப்பிட்டார். “யோகாவைத் தவறாமல் பயிற்சி செய்வதன் மூலம், தனிநபர்கள் தங்கள் உடலையும் மனதையும் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையில் வைத்திருக்க வழிவகுக்கிறது என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

பகவத் கீதையின் போதனைகளைக் குறிப்பிட்ட, திரு நரேந்திர மோடி அவர்கள், “சமச்சீரான உணவுப் பழக்கங்கள், சமச்சீரான பொழுதுபோக்கு, செயல்கள், சமச்சீரான உறக்கம் மற்றும் விழிப்புநிலை ஆகியவை, துன்பங்களை வெல்வதற்கான ஒரு வழியாக யோகாவை மாற்றுகின்றன” என்று கூறினார். சமநிலையே யோகாவின் அடித்தளம் என்றும், அது ஒரு நிறைவான வாழ்க்கைக்கும் சமமாக அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார். யோகா, சமச்சீரான முறையில் வாழ்வதற்கான கலையைக் கற்றுத் தருகிறது என்று அவர் கூறினார். என்ன செய்ய வேண்டும், எதைத் தவிர்க்க வேண்டும் என்பது குறித்து அது தனிநபர்களுக்கு வழிகாட்டி, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வளர்த்துக்கொள்ள அவர்களுக்கு உதவுகிறது என்று பிரதமர் தெரிவித்தார்.

யோகா என்பது உடல் நலத்திற்கு மட்டும் உரியதல்ல என்றும் மாறாக, அது மனநலத்திலிருந்து உடல்நலத்திற்கு ஒரு பாதையை வழங்குகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். யோகா என்பது இனி ஒரு தனிப்பட்ட வாழ்க்கை முறைப் பயிற்சியாக மட்டும் கருதப்படுவதில்லை எனவும் அது உலகிற்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கான அவசியமாகிவிட்டது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் பல லட்சக்கணக்கான மக்கள் யோகா பயிற்சிகளில் பங்கேற்பதுடன், யோகாவை அன்றாட வாழ்வின் ஓர் ஒருங்கிணைந்த பகுதியாக யோகாவை மாற்றுவதற்கான கூட்டு உறுதிப்பாட்டைப் புதுப்பித்துக் கொள்ளவும் இந்த நாள் ஒரு வாய்ப்பை வழங்குகிறது என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். யோகாவை ஒரு நாளிலோ அல்லது ஓர் நிகழ்விலோ மட்டும் செய்யாமல், இது மக்களின் வாழ்விலும், அவர்களது குடும்பத்தினரின் வாழ்விலும், வருங்கால சந்ததியினரின் வாழ்விலும் நிரந்தர அங்கமாக மாறுவதை உறுதி செய்யுமாறு அவர் மக்களைக் கேட்டுக்கொண்டார்.

ஆரோக்கியமான சமூகமே வலிமையான, செழிப்பான மற்றும் தன்னம்பிக்கை மிக்க ஒரு தேசத்திற்கு அடித்தளமாக அமைகிறது என்று பிரதமர் கூறினார். அனைவரின் நல்வாழ்விற்கான தமது விருப்பங்களைத் தெரிவித்த அவர், “சர்வே பவந்து சுகினஹ, சர்வே சந்து நிராமயஹ” (அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கட்டும், அனைவரும் நோயிலிருந்து விடுபடட்டும்) என்ற பழமையான பிரார்த்தனை ஸ்லோகத்தை நினைவு கூர்ந்து தமது உரையை நிறைவு செய்தார்.

Leave a Reply