தூய்மையான எரிசக்தித் துறையில் இந்தியா ஒரு உலகளாவிய சக்தியாகத் தன்னை நிலைநிறுத்தி வருகிறது; : டாக்டர் ஜிதேந்திர சிங்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல் ஆகிய துறைகளின் மத்திய இணை அமைச்சரும் (தனிப் பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுக் குறைகள், ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று இங்கு கூறுகையில், கொள்கை ஆதரவு, தொழில்நுட்பப் புத்தாக்கம் மற்றும் தொழில்துறைப் பங்கேற்பு ஆகியவற்றின் சீரான கலவையின் மூலம், தூய்மையான எரிசக்தித் துறையில் இந்தியா தன்னை ஒரு உலகளாவிய சக்தியாக நிலைநிறுத்தி வருகிறது என்றார்.

பசுமை ஹைட்ரஜனை மேம்படுத்துதல், அணுசக்தித் திறனை விரிவுபடுத்துதல் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களை வலுப்படுத்துதல் ஆகியவற்றை ஒரே நேரத்தில் செய்துவரும் அதேவேளையில், எலக்ட்ரோலைசர்கள் போன்ற முக்கிய தொழில்நுட்பங்களில் உள்நாட்டுத் திறன்களையும் நாடு வளர்த்து வருவதாக அமைச்சர் கூறினார். பொது-தனியார் கூட்டாண்மை மூலம் விரிவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், மேம்படுத்தப்பட்ட ஆராய்ச்சி நிதி மற்றும் புதுமையால் வழிநடத்தப்படும் வளர்ச்சியின் ஆதரவுடன், வலுவான மற்றும் தன்னிறைவு பெற்ற ஒரு சூழலமைப்பை உருவாக்குவதே இந்தியாவின் அணுகுமுறையாக உள்ளது என்றார்.

புது தில்லியில் உள்ள என்.டி.எம்.சி மாநாட்டு மையத்தில் நடைபெற்ற உலக பெட்ரோகரி மாநாட்டுடன் இணைந்த உலக ஹைட்ரஜன் எரிசக்தி உச்சிமாநாட்டில் டாக்டர் ஜிதேந்திர சிங் உரையாற்றினார். இந்த மாநாடு, பெட்ரோலியம், நிலக்கரி, எரிவாயு மற்றும் வளர்ந்து வரும் ஹைட்ரஜன் துறைகளைச் சேர்ந்த கொள்கை வகுப்பாளர்கள், உலகளாவிய தொழில்துறை தலைவர்கள், துறை வல்லுநர்கள் மற்றும் பங்குதாரர்களை ஒன்றிணைத்து, எதிர்கால எரிசக்தி பாதைகள் குறித்த கலந்துரையாடல்களுக்கு ஒரு தளத்தை வழங்கியது.

இந்தியாவின் வளர்ந்து வரும் எரிசக்தி செயல்திட்டத்தைக் குறிப்பிட்ட அமைச்சர், எரிசக்தி பாதுகாப்பை நிலைத்தன்மையுடன் இணைக்கும் ஒரு பன்முக உத்தியை நாடு பின்பற்றி வருவதாகக் கூறினார். எண்ணெய் மற்றும் எரிவாயுவில் கிட்டத்தட்ட 100 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடுகள், ஆய்வுப் பகுதிகளை 1 மில்லியன் சதுர கிலோமீட்டராக விரிவுபடுத்துதல், மற்றும் எரிசக்தி கலவையில் இயற்கை எரிவாயுவின் பங்கை 15 சதவீதமாக அதிகரித்தல் ஆகியவற்றை இந்தியா இலக்காகக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார். அதே நேரத்தில், இந்தியாவின் சுத்திகரிப்புத் திறன் தொடர்ந்து விரிவடைந்து, உலக அளவில் முன்னணி நாடுகளில் ஒன்றாக இந்தியாவை நிலைநிறுத்துகிறது.

தூய்மையான எரிசக்தி மாற்றம் குறித்துப் பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், ரூ.19,744 கோடி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கம், மாற்று எரிபொருள் சூழலமைப்புகளை உருவாக்குவதில் இந்தியாவை முன்னணி நாடுகளில் ஒன்றாக நிலைநிறுத்தியுள்ளது என்றார். எஃகு மற்றும் சிமெண்ட் போன்ற, கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பது கடினமான துறைகளில் பசுமை ஹைட்ரஜன் முக்கியப் பங்கு வகிக்கும் என்றும், அதே வேளையில் உள்நாட்டு உற்பத்தி மற்றும் புத்தாக்கத்தின் மூலம் உற்பத்திச் செலவுகளைக் குறைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறினார்.

இந்தியாவின் அணுசக்தித் திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களையும் அமைச்சர் பகிர்ந்துகொண்டார். சமீபத்தில் அறிவிக்கப்பட்ட அணுசக்தித் திட்டத்தின்படி, 2047-ஆம் ஆண்டுக்குள் 100 ஜிகாவாட் அணுசக்தித் திறனை எட்டுவதை நோக்கமாகக் கொண்டிருப்பதாக அவர் கூறினார். உள்நாட்டுத் தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன் இந்தியா தனது அணுசக்தித் திட்டத்தின் அடுத்தகட்டத்திற்குள் நுழைந்துள்ளதாகவும், இதன்மூலம் ஒரு சில நாடுகளின் வரிசையில் இடம்பிடித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சிறு அணு உலைகளின் பங்கை எடுத்துரைத்த டாக்டர் ஜிதேந்திர சிங், 2033-ஆம் ஆண்டுக்குள் ஐந்து சிறு மட்டு அணு உலைகளை உருவாக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாகவும், அவற்றில் மூன்றின் பணிகள் ஏற்கனவே நடைபெற்று வருவதாகவும் கூறினார். இவற்றில் பாரத் சிறு மட்டு அணு உலை (SMR), நிறுவப்பட்ட கனநீர் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட பாரத் சிறு அணு உலை (BSR), மற்றும் சில மெகாவாட் திறன் கொண்ட ஒரு சிறிய அளவிலான ஹைட்ரஜன் இணைப்பு அணு உலை ஆகியவை அடங்கும். இத்தகைய அணு உலைகள், நெகிழ்வான, விரிவாக்கக்கூடிய மற்றும் பரவலாக்கப்பட்ட தூய்மையான எரிசக்தி தீர்வுகளைச் சாத்தியமாக்குவதோடு, வளர்ந்து வரும் ஹைட்ரஜன் பயன்பாடுகளுக்கும் ஆதரவளிக்கும் என்று அவர் கூறினார்.

சமீபத்திய கொள்கை சீர்திருத்தங்கள், அணுசக்தித் துறையைத் தனியார் பங்கேற்புக்குத் திறந்துவிட்டுள்ளதாகவும், பரந்த அளவிலான தொழில் துறை ஈடுபாட்டை எளிதாக்கும் வகையில் பொறுப்புடைமை விதிகள் முறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். இந்த நடவடிக்கைகள், புத்தொழில் நிறுவனங்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களைத் தூய்மையான எரிசக்தி உள்கட்டமைப்பின் விரிவாக்கத்திற்குப் பங்களிக்க ஊக்குவிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பசுமை வேலைகள் மற்றும் புத்தாக்கத்தில் உருவாகி வரும் வாய்ப்புகள் குறித்தும் டாக்டர் ஜிதேந்திர சிங் பேசினார். மின்சார வாகனப் போக்குவரத்து, மின்கல மறுசுழற்சி, மின்கட்டமைப்பு மேலாண்மை மற்றும் புதுப்பிக்கத்தக்க உற்பத்தி போன்ற துறைகள் புதிய வாழ்வாதார வழிகளை உருவாக்கி வருவதாக அவர் குறிப்பிட்டார். பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் மற்றும் விவசாயக் கழிவுகளை உயிரி எரிபொருட்களாக மாற்றுவது உள்ளிட்ட வட்டப் பொருளாதாரத்தில் நடைபெற்று வரும் முயற்சிகளையும், ஆழ்கடல் திட்டத்தின் கீழ் கடல் ஆற்றல் போன்ற புதிய எல்லைகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தியாவின் மக்கள்தொகை பலம், தொழில்நுட்பத் திறன்கள் மற்றும் கொள்கை வழிகாட்டுதல் ஆகியவை, உலகளாவிய கரியமில வாயு வெளியேற்றக் குறைப்பு முயற்சிகளில் ஒரு முக்கியப் பங்கை வகிக்கவும், அதே நேரத்தில் தனது மக்களுக்கு நிலையான வளர்ச்சியையும் எரிசக்தி அணுகலையும் உறுதி செய்யவும் அதனை நிலைநிறுத்துகின்றன என்று மத்திய அமைச்சர் கூறினார்.

Leave a Reply