பிரதமர் திரு நரேந்திர மோடி, 2026 ஏப்ரல் 14 அன்று உத்தரகாண்ட் மற்றும் உத்தரப் பிரதேசத்திற்கு பயணம் மேற்கொள்வார். காலை சுமார் 11:15 மணியளவில், டெல்லி-டேராடூன் பொருளாதார வழித்தடத்தின் உயர்த்தப்பட்ட பகுதியில் உள்ள வனவிலங்கு வழித்தடத்தை ஆய்வு செய்வதற்காக, பிரதமர் உத்தரப் பிரதேசத்தில் உள்ள சஹாரன்பூருக்குச் செல்வார். காலை சுமார் 11:40 மணியளவில், டேராடூன் அருகே உள்ள ஜெய் மா தாத் காளி கோவிலில் பிரதமர் தரிசனம் மற்றும் பூஜை செய்வார். அதைத் தொடர்ந்து, மதியம் சுமார் 12:30 மணியளவில், டேராடூனில் நடைபெறும் ஒரு பொது நிகழ்ச்சியில் டெல்லி-டேராடூன் பொருளாதார வழித்தடத்தை பிரதமர் திறந்து வைப்பார், மேலும் அந்நிகழ்ச்சியில் கூட்டத்தில் உரையாற்றுவார்.
213 கி.மீ. நீளமுள்ள, ஆறு வழித்தடங்களைக் கொண்ட, அணுகல் கட்டுப்பாட்டுடன் கூடிய டெல்லி-டேராடூன் பொருளாதார வழித்தடம் ₹12,000 கோடிக்கும் அதிகமான செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடம் டெல்லி, உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்கள் வழியாகச் செல்கிறது. மேலும், இது தற்போது ஆறு மணி நேரத்திற்கும் மேலாக உள்ள டெல்லி மற்றும் டேராடூன் இடையேயான பயண நேரத்தை, சுமார் இரண்டரை மணி நேரமாகக் குறைக்கும்.
இத்திட்டத்தின் செயலாக்கத்தில், தடையற்ற அதிவேக இணைப்பை உறுதி செய்வதற்காக 10 சந்திப்புகள், மூன்று ரயில்வே மேம்பாலங்கள், நான்கு பிரதான பாலங்கள் மற்றும் 12 வழித்தட வசதிகளின் கட்டுமானமும் அடங்கும். பயணிகளுக்குப் பாதுகாப்பான மற்றும் திறமையான பயண அனுபவத்தை வழங்குவதற்காக, இந்த வழித்தடத்தில் மேம்பட்ட போக்குவரத்து மேலாண்மை அமைப்பு (ATMS) பொருத்தப்பட்டுள்ளது.
இப்பகுதியின் சூழலியல் உணர்திறன், வளமான பல்லுயிர்ப் பெருக்கம் மற்றும் வனவிலங்குகளைக் கருத்தில் கொண்டு, மனித-விலங்கு மோதலைக் கணிசமாகக் குறைக்கும் நோக்கில் பல அம்சங்களுடன் இந்த வழித்தடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. காட்டு விலங்குகளின் தடையற்ற நடமாட்டத்தை உறுதி செய்வதற்காக, இந்தத் திட்டம் பல பிரத்யேக வனவிலங்குப் பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. இவற்றில், ஆசியாவிலேயே மிக நீளமானவற்றில் ஒன்றான 12 கி.மீ நீளமுள்ள வனவிலங்கு மேம்பால வழித்தடமும் அடங்கும். மேலும், இந்த வழித்தடத்தில் எட்டு விலங்குப் பாதைகள், தலா 200 மீட்டர் நீளமுள்ள இரண்டு யானைகளுக்கான கீழ்ப்பாலங்கள் மற்றும் தாத் காளி கோயிலுக்கு அருகில் 370 மீட்டர் நீளமுள்ள ஒரு சுரங்கப்பாதையும் உள்ளன.
டெல்லி-டேராடூன் பொருளாதார வழித்தடமானது, முக்கிய சுற்றுலா மற்றும் பொருளாதார மையங்களுக்கு இடையேயான இணைப்பை மேம்படுத்துவதன் மூலமும், பிராந்தியம் முழுவதும் வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கான புதிய வழிகளைத் திறப்பதன் மூலமும், பிராந்தியப் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்துவதில் ஒரு முக்கியப் பங்காற்றும். அதிவேக இணைப்பைச் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் குடிமக்களின் மேம்பட்ட வாழ்க்கைத் தரத்துடன் இணைக்கும் அடுத்த தலைமுறை உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை இந்தத் திட்டம் பிரதிபலிக்கிறது.
திவாஹர்
