இந்தியாவின் புத்தாக்கச் சூழலமைப்பை வலுப்படுத்த தொழில்துறை ஈடுபாடு அவசியம் என்பதை வலியுறுத்திய மத்திய அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) நடவடிக்கைகளில் தனியார் துறை தனது பங்களிப்பை விரைவுபடுத்த வேண்டும் என்று இன்று அழைப்பு விடுத்தார்.
விண்வெளி மற்றும் அணுசக்தி போன்ற துறைகளைத் தனியார் நிறுவனங்களுக்குத் திறந்துவிடுவது, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிதி (RDI) போன்ற பிரத்யேக வழிமுறைகளை உருவாக்குவது உள்ளிட்ட தொடர்ச்சியான சாதகமான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளதாக அமைச்சர் கூறினார். மேலும், தொழில்துறையானது இப்போது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் இன்னும் தீவிரமாக முதலீடு செய்வதன் மூலமும், நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் பங்களிப்பதன் மூலமும் இதற்குப் பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு செயல்முறைகளை எளிதாக்குவது குறித்த இரண்டு நிதி ஆயோக் அறிக்கைகளின் வெளியீட்டு விழாவில் பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், அமைப்புகள் எவ்வாறு வடிவமைக்கப்படுகின்றன என்பதிலிருந்து, களத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்களால் அவை உண்மையில் எவ்வாறு அனுபவிக்கப்படுகின்றன என்பதற்கு கவனம் மாற வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த நேரடி சவால்களை ஆதார அடிப்படையிலான ஆவணப்படுத்தல், சீர்திருத்தத்திற்கான தேவையை வலுப்படுத்துவதோடு, அறிவியல் சமூகத்தைத் தாண்டி கொள்கை வகுப்பாளர்களிடம் கவலைகளைக் கொண்டு செல்லவும் உதவுகிறது என்று அவர் கூறினார்.
“எந்தவிதமான தடைகளும், மந்தநிலைகளும், தவிர்க்கக்கூடிய இடையூறுகளும் இல்லாதபோதுதான் ஆராய்ச்சி செழிக்கும் என்பதை மறுக்க முடியாது,” என்று கூறிய டாக்டர் ஜிதேந்திர சிங், வெளிப்புற இடையூறுகள் தவிர்க்க முடியாதவையாக இருந்தாலும், தாமதங்கள் மேலும் அதிகரிப்பதைத் தடுக்க, “கவனிக்கப்பட வேண்டியவை கவனிக்கப்பட வேண்டும்” என்றும் மேலும் கூறினார்.
இந்தியாவின் விரிவடைந்து வரும் அறிவியல் திறன்களுக்கும், அவற்றை ஆதரிக்கும் அமைப்புகளுக்கும் இடையே அதிகரித்து வரும் பொருத்தமின்மையைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், நாட்டில் “மனித வளங்களுக்குப் பற்றாக்குறை இல்லை” என்றும், அதன் அறிவியல் திறமை உலகளவில் பெருகிய முறையில் அங்கீகரிக்கப்பட்டு வருகிறது என்றும் குறிப்பிட்டார். இருப்பினும், நிறுவன மற்றும் நடைமுறை ரீதியான உராய்வுகள் முடிவுகளைத் தொடர்ந்து கட்டுப்படுத்துகின்றன என்றும் அவர் கூறினார்.
ஆராய்ச்சியின் மாறிவரும் தன்மையை எடுத்துரைத்த டாக்டர் ஜிதேந்திர சிங், அறிவியல் பணிகள் தற்போது தொழில், நிதி மற்றும் உலகளாவிய ஒத்துழைப்புடன் ஆழமாகப் பிணைந்துள்ளதால், பல்துறை மற்றும் குறுக்குத் துறை ஈடுபாட்டை எளிதாக்கும் அமைப்புகள் அவசியமாகின்றன என்றார். விண்வெளி மற்றும் அணுசக்தி போன்ற துறைகளைத் தனியார் பங்கேற்புக்குத் திறக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்றும், இது ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கக் களத்தில் ஒரு பரந்த மாற்றத்தைக் குறிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நிதி ஆயோக் வெளியிட்ட அறிக்கைகள், பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களுடனான கலந்தாலோசனைகளின் அடிப்படையில், ஆராய்ச்சி அமைப்புகளில் அதிக நெகிழ்வுத்தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் முன்கணிப்புத்தன்மை ஆகியவற்றின் அவசியத்தை எடுத்துரைக்கின்றன. செயல்திறன் என்பது காலக்கெடுவைக் குறைப்பது மட்டுமல்ல, தெளிவை வழங்குவதும் ஆகும் என்றும், இது விஞ்ஞானிகள் தொடர்ச்சியாகவும் நம்பிக்கையுடனும் தங்கள் பணிகளைத் திட்டமிட உதவுகிறது என்றும் அவை வலியுறுத்துகின்றன.
இந்தியாவின் ஆராய்ச்சிச் சூழலை வலுப்படுத்த, அரசாங்கத்தைத் தாண்டி நிறுவனங்கள், தொழில்துறை மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தையும் உள்ளடக்கிய, தொடர்ச்சியான, அமைப்பு ரீதியான ஈடுபாடு தேவை என்று டாக்டர் ஜிதேந்திர சிங் முடித்தார். “அறிவியல் என்பது இன்று விஞ்ஞானிகளிடம் மட்டும் விட்டுவிட முடியாத அளவுக்கு மிகவும் தீவிரமான ஒரு துறையாகும்,” என்று கூறிய அவர், ஆராய்ச்சியானது விரிவாக்கக்கூடிய தொழில்நுட்பங்கள், தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளாக மாறுவதை உறுதிசெய்ய, பரந்த அளவிலான பங்குதாரர்களின் பங்கேற்புக்கு அழைப்பு விடுத்தார்.
அதிகரித்த உலகளாவிய ஒத்துழைப்பு மற்றும் ஆராய்ச்சி வெளியீடுகளை நிஜ உலகப் பயன்பாடுகளுக்கு மாற்றுதல் உள்ளிட்ட பரந்த பொருளாதார மற்றும் மூலோபாய இலக்குகளுடன் தனது அறிவியல் சூழலமைப்பையும், புத்தாக்கத் திறனை விரிவுபடுத்தவும் இந்தியா முற்படும் வேளையில், ஆராய்ச்சி செயல்முறைகளை எளிதாக்குவதில் கவனம் செலுத்தப்படுகிறது.
எஸ்.சதிஸ் சர்மா
