தற்போது நிலவிவரும் மேற்கு ஆசிய நெருக்கடியால் உருவாகியுள்ள முன்னெப்போதும் இல்லாத சூழ்நிலையானது, இந்திய விமான நிறுவனங்கள் உட்பட உலகளாவிய விமானப் போக்குவரத்துச் செயல்பாடுகளுக்குக் குறிப்பிடத்தக்க சவால்களை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், அரசாங்கத்தின் சரியான நேரத்திலான மற்றும் சீரான தலையீடுகளின் ஆதரவுடன், இந்திய உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை தொடர்ந்து மீள்திறனுடனும் வலிமையுடனும் இருந்து வருகிறது.
சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், மாறிவரும் சூழ்நிலையை உன்னிப்பாகக் கண்காணித்து வரும் நிலையில், உள்நாட்டு விமான நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. முன்னதாக, உள்நாட்டு விமான நிறுவனங்களுக்கான ஏவியேட் டர்பைன் எரிபொருள் (ATF) விலை உயர்வை 25% எனக் கட்டுப்படுத்தி, ஒரு பகுதி உயர்வை மட்டுமே அரசாங்கம் அறிவித்திருந்தது. ஆனால், உலகளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட கடுமையான உயர்வு, விமான டர்பைன் எரிபொருள் (ATF) விலையில் விகிதாசாரமற்ற உயர்வுக்கு வழிவகுத்துள்ளது.
விமான நிறுவனங்கள் தங்கள் செயல்பாட்டுச் செலவுகளை நிர்வகிக்க உதவுவதையும், அதே நேரத்தில் மலிவு விலை விமானப் பயணத்தின் பலன்கள் பயணிகளைத் தொடர்ந்து சென்றடைவதையும் உறுதி செய்வதே இந்த நடவடிக்கையின் நோக்கமாக இருந்தது. தற்போது, இந்த முன்னெப்போதும் இல்லாத சவால்களுக்குப் பல அடுக்கு பதிலளிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, உள்நாட்டு விமான நிறுவனங்களுக்கான தரையிறக்கம் மற்றும் நிறுத்தம் கட்டணங்களை மூன்று மாத காலத்திற்கு 25% குறைக்க அமைச்சகம் மற்றொரு முக்கிய முடிவை எடுத்துள்ளது.
இந்த அறிவிப்பு குறித்துப் பேசிய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு ராம் மோகன் நாயுடு, “பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், விமானப் போக்குவரத்துத் துறையில் பயணிகளுக்கு விமானப் பயணத்தை மிகவும் மலிவான மற்றும் வசதியான பயண விருப்பமாக மாற்றுவதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாக இருந்து வருகிறது. உலகளாவிய விமானச் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ள தற்போதைய சவாலான சூழ்நிலையிலும் கூட, விமான ரத்துகளும் அதிகரித்து வரும் எரிபொருள் விலைகளும் நமது உள்நாட்டு விமான நிறுவனங்களின் செயல்பாடுகளைக் கடுமையாகப் பாதிக்காமல் இருப்பதை நாங்கள் உறுதி செய்துள்ளோம். உலகளவில் ஏடிஎஃப் (ATF) செலவுகள் 100%-க்கும் மேல் அதிகரித்துள்ள நிலையில், நாங்கள் 25% என்ற மிதமான உயர்வை மட்டுமே வாடிக்கையாளர்களிடம் சுமத்தியுள்ளோம்,” என்று தெரிவித்தார்.
இந்தத் தலையீடுகள் குறித்து மேலும் பேசிய அமைச்சர், “தற்போது, விமான நிறுவனங்களுக்கும், அதன் மூலம் பயணிகளுக்கும் ஆதரவளிக்கும் இறுதி நோக்கத்துடன், விமான நிலைய நிர்வாகிகளால் விதிக்கப்படும் தரையிறக்கம் மற்றும் நிறுத்தம் கட்டணங்களைக் குறைப்பதன் மூலம் விமானக் கட்டண உயர்வுகள் மேலும் கட்டுப்படுத்தப்படுகின்றன. இந்த நிலையற்ற காலகட்டத்தில் விமானப் போக்குவரத்துத் துறையை நிலையாக வைத்திருக்கவும், பயணிகளுக்கு எளிதான பயணத்தை உறுதி செய்யவும் அமைச்சகம் மேற்கொள்ளும் ஒட்டுமொத்த முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. அதிகரித்து வரும் செயல்பாட்டுச் செலவுகளால் தவிக்கும் விமான நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க தலையீடு இதுவாகும். இது தொடர்பாக, விமான நிறுவனங்கள், விமான நிலைய நிர்வாகிகள் மற்றும் இந்திய விமான நிலையப் பொருளாதார ஒழுங்குமுறை ஆணையம் (AERA) உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருடனும் நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம்,” என்றார்.
தனது அதிகார வரம்பிற்குட்பட்ட அனைத்து முக்கிய விமான நிலையங்களிலும், நடைமுறையில் உள்ள கட்டண விகிதத்திலிருந்து தரையிறக்கம் மற்றும் நிறுத்துதல் கட்டணங்களை 25% குறைக்குமாறு AERA-விற்கு அமைச்சகம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இந்தக் குறைப்பு அனைத்து உள்நாட்டு விமானங்களுக்கும் உடனடியாக அமலுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், மூன்று மாத காலத்திற்குப் பொருந்தும். இது தொடர்பாக AERA ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது; அதில், தனிப்பட்ட விமான நிலையங்களால் வசூலிக்கப்படும் எந்தவொரு குறைவான தொகையும், அடுத்த ஐந்தாண்டு காலக் கட்டுப்பாட்டுக் காலத்தில் கட்டண நிர்ணயத்தின் போது சரிசெய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இதேபோல், இந்திய விமான நிலைய ஆணையமும் (AAI), அதன் அனைத்து முக்கியமற்ற விமான நிலையங்களிலும் தரையிறக்கம் மற்றும் நிறுத்தம் செய்வதற்கான கட்டணங்களை, அங்கீகரிக்கப்பட்ட கட்டணத்தில் 25% குறைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து உள்நாட்டு விமானங்களுக்கும் பொருந்தும் இந்தக் கட்டணக் குறைப்பு, மூன்று மாத காலத்திற்கு நடைமுறையில் இருக்கும்.
இந்த நடவடிக்கைகள், அடுத்த மூன்று மாத காலத்தில் முக்கிய விமான நிலையங்களில் விமான நிறுவனங்கள் செலுத்த வேண்டிய தரையிறக்கம் மற்றும் நிறுத்தம் தொடர்பான கட்டணங்களை சுமார் ₹400 கோடி குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், உருவாகி வரும் சூழ்நிலையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. மேலும், விமானச் செயல்பாடுகளின் நிலைத்தன்மையையும், பயணிகளுக்கான பாதுகாப்பான மற்றும் மலிவான விமானப் பயணத்தையும் உறுதி செய்வதற்காக, தேவையான கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
எம்.பிரபாகரன்
