ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு வசதியான பயணத்தையும், சிறந்த பயண அனுபவத்தையும் வழங்குவதே ரயில்வேயின் முதன்மையான முன்னுரிமை: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.

மத்திய ரயில்வே, தகவல் மற்றும் ஒளிபரப்பு மற்றும் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், இன்று புது தில்லியில் உள்ள ரயில் பவனில் நாடு தழுவிய ரயில்வே அதிகாரிகளுடன் ஒரு ஆய்வுக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.

ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு ஒரு சிறந்த பயண அனுபவத்தை வழங்குவதே இந்திய ரயில்வேயின் முதன்மையான முன்னுரிமையாகத் தொடர்கிறது என்று மத்திய அமைச்சர் வலியுறுத்தினார். இந்த இலக்கை நோக்கி அனைத்து அதிகாரிகளும் கூட்டாகப் பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். கடந்த ஆண்டு பாராட்டத்தக்க செயல்பாட்டிற்காக ஒட்டுமொத்த ரயில்வே குடும்பத்தினருக்கும் திரு. வைஷ்ணவ் வாழ்த்து தெரிவித்தார். ரயில் விபத்துகளில் ஏற்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க குறைவும், சாதனை அளவிலான சரக்கு ஏற்றமும் நாடு முழுவதும் இந்திய ரயில்வேயின் நற்பெயரை கணிசமாக மேம்படுத்தியுள்ளன என்று அவர் சுட்டிக்காட்டினார். பண்டிகைக் காலங்களில் அதிக எண்ணிக்கையிலான சிறப்பு ரயில்கள் திறம்பட இயக்கப்பட்டு, பயணத்திற்கான அதிகரித்த தேவையை பூர்த்தி செய்ய உதவியதையும் அவர் பாராட்டினார்.

பயணிகளின் அனுபவத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த மத்திய அமைச்சர், ரயில் நிலையங்கள் பொதுமக்களுக்கு முன்பாக இந்திய ரயில்வேயின் முகமாகத் திகழ்கின்றன என்றும், அவை தூய்மையாகவும் நன்கு பராமரிக்கப்பட்டும் இருக்க வேண்டும் என்றும் கூறினார். அனைத்து நிலையங்களிலும் தூய்மையையும், மேம்படுத்தப்பட்ட பயணிகள் வசதிகளையும் உறுதிசெய்ய, அதிகாரிகள் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். கடந்த பத்தாண்டுகளில் ரயில்வே நவீனமயமாக்கலுக்காக சாதனை அளவிலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதைக் குறிப்பிட்ட அவர், ரயில் நிலையங்களை மாற்றி அமைப்பதற்கும் பயணிகள் வசதிகளை மேம்படுத்துவதற்கும் நிதியை உகந்த முறையில் பயன்படுத்துவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

உச்ச நேரங்களில், குறிப்பாகப் பண்டிகைக் காலங்களில், பயணிகள் எவ்வித சிரமமுமின்றி நடைமேடைகளை அடைந்து ரயில்களில் எளிதாக ஏறுவதை உறுதிசெய்யும் வகையில் கூட்ட மேலாண்மை அமைய வேண்டும் என மத்திய அமைச்சர் வலியுறுத்தினார். பயணிகளின் வசதி மற்றும் அணுகலை மேம்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்குமாறு அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

நடைபெற்று வரும் ரயில்வே திட்டங்களுக்காக நிலுவையில் உள்ள நிலம் கையகப்படுத்தும் பிரச்சினை குறித்தும் விவாதிக்கப்பட்டது. இச்செயல்முறையை விரைவுபடுத்தவும், தேவைப்பட்டால், தடைகளைக் களைவதற்காக மாநில வருவாய் மற்றும் வனத்துறைகளின் அனுபவம் வாய்ந்த ஓய்வுபெற்ற அதிகாரிகளின் நிபுணத்துவத்தை நாடவும் திரு வைஷ்ணவ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

Leave a Reply