‘இதய நோய்களில் உடல் பருமன் மற்றும் கொழுப்பு மேலாண்மை’ குறித்த விரிவான பாடப்புத்தகத்தை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் வெளியிட்டார்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல் ஆகிய துறைகளின் மத்திய இணை அமைச்சரும் (தனிப் பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுக் குறைகள் மற்றும் ஓய்வூதியங்கள், அணுசக்தித் துறை மற்றும் விண்வெளித் துறை ஆகியவற்றின் இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று இங்கு கூறுகையில், ஒட்டுமொத்த உடல் பருமனை விட, வயிற்றுப் பகுதி அல்லது மைய உடல் பருமன் ஒரு பெரிய ஆபத்துக் காரணியாகும். குறிப்பாக, ஒல்லியாகவும் மெலிதாகவும் தோற்றமளிக்கும் நபர்கள் கூட கணிசமான உள்ளுறுப்புக் கொழுப்பைக் கொண்டிருக்கும் இந்தியச் சூழலில் இது பொருந்தும். உடல் பருமனைச் சாராத ஒரு ஆபத்துக் காரணியே மைய உடல் பருமன் என்று அவர் விளக்கினார்.

இங்கு நடைபெற்ற ஒரு விழாவில், “இருதய நோய்களில் உடல் பருமன் மற்றும் கொழுப்பு மேலாண்மையில் முன்னேற்றங்கள்” என்ற தலைப்பில் இருதயவியல் குறித்த ஒரு விரிவான பாடநூலை வெளியிட்ட டாக்டர் ஜிதேந்திர சிங், வெளித்தோற்றத்தில் பருமனற்றவர்களாகத் தோன்றும் நபர்களிடம்கூட, மைய உடல் பருமன் அவர்களை நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இருதய நோய்கள், கொழுப்பு கல்லீரல், கொழுப்பு கோளாறுகள் போன்ற பலதரப்பட்ட வளர்சிதை மாற்றக் கோளாறுகளுக்கு ஆளாக்குகிறது என்று கூறினார்.

தனித்துவமான இந்திய உடல் அமைப்பைக் குறிப்பிட்டு, ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலரிடமும் ஒட்டுமொத்த உடல் பருமன் அதிகரித்து வரும் வேளையில், வயிற்றுப் பகுதியில் ஏற்படும் அதிகப்படியான கொழுப்பின் பரவல் விகிதாசாரமற்ற முறையில் அதிகமாகவே உள்ளது என்றும், இது இருதய வளர்சிதை மாற்ற அபாயத்திற்கான ஒரு தனிப்பட்ட காரணியாகச் செயல்படுகிறது என்றும் அமைச்சர் கூறினார். பொதுவான உடல் பருமன் இல்லாவிட்டாலும் கூட, வயிற்றைச் சுற்றி உள்ளுறுப்புக் கொழுப்பு இருப்பது குறிப்பிடத்தக்க மருத்துவ விளைவுகளைக் கொண்டுள்ளது மற்றும் இதற்கு முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் இலக்கு சார்ந்த தலையீடு தேவைப்படுகிறது.

இந்த வெளியீட்டைச் சரியான நேரத்தில் வெளிவந்த மற்றும் பொருத்தமான ஒன்று என விவரித்த டாக்டர் ஜிதேந்திர சிங், பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் எடுத்துரைத்த, அதிகரித்து வரும் உடல் பருமன் சுமையைக் கையாள்வதற்கான தேசிய முன்னுரிமையுடன் இந்தப் புத்தகம் ஒத்துப்போகிறது என்றார். மேலும், எண்ணெய் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பயன்பாட்டைக் குறைப்பது உள்ளிட்ட வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் பொது விழிப்புணர்வை அதிகரிக்குமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார். இந்த முயற்சி, “விக்ஷித் பாரத், ஸ்வஸ்த்ய பாரத் மற்றும் உடல் பருமன் இல்லாத பாரத்” என்ற பரந்த தொலைநோக்குப் பார்வையுடன் ஒத்துப் போகிறது.

வளர்ந்து வரும் மருத்துவப் புரிதலை எடுத்துரைக்கும் வகையில், கொழுப்பு கல்லீரல் நோய், இன்சுலின் எதிர்ப்புத்தன்மை மற்றும் இளம் வயதிலேயே ஏற்படும் இருதய நோய்கள் போன்றவற்றுடன் தொப்பைக் கொழுப்பை இணைக்கும் ஆதாரங்கள் அதிகரித்து வருவதை அமைச்சர் குறிப்பிட்டார். இளம் வயதினரிடையே இரண்டாம் வகை நீரிழிவு நோய் மற்றும் இதய நோய்கள் உள்ளிட்ட வளர்சிதை மாற்றக் கோளாறுகள் அதிகரித்து வருவது, மாறிவரும் வாழ்க்கை முறை, உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் குறைந்த உடல் சமநிலை ஆகியவற்றைப் பிரதிபலிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

சமச்சீரான சுகாதாரப் பழக்கவழக்கங்களின் முக்கியத்துவத்தையும் டாக்டர் ஜிதேந்திர சிங் எடுத்துரைத்தார். போதுமான தயாரிப்பு அல்லது ஓய்வின்றி உடலை அதிகமாக வருத்திக்கொள்வது உள்ளிட்ட, உடற்பயிற்சிக்கான மிதமிஞ்சிய அல்லது அறிவியல் பூர்வமற்ற அணுகுமுறைகள் உடல்நல அபாயங்களை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார். நீடித்த வாழ்க்கைமுறை ஒழுக்கம், போதுமான உறக்கம் மற்றும் அறிவியல் பூர்வமான வழிகாட்டுதலுடன் கூடிய தடுப்புப் பராமரிப்பு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

புகழ்பெற்ற இருதயநோய் நிபுணர் டாக்டர் எச்.கே. சோப்ராவால் தொகுக்கப்பட்ட இந்தப் பாடநூல், இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பங்களிப்பாளர்களின் அதிநவீன நுண்ணறிவுகளை ஒன்றிணைக்கிறது. இது, வளர்சிதை மாற்ற சிகிச்சைகள், கொழுப்பு மேலாண்மை, எண்ணிம சுகாதாரம் மற்றும் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் மருத்துவ முடிவெடுக்கும் அமைப்புகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை ஒருங்கிணைத்து, வழக்கமான இடர் காரணி அடிப்படையிலான மேலாண்மையிலிருந்து துல்லியமான தடுப்பு முறைக்கு ஒரு மாற்றத்தைக் குறிக்கிறது.

இந்த வெளியீடானது, செமாக்ளுடைடு மற்றும் டிர்செபடைடு போன்ற GLP-1 ஏற்பி அகோனிஸ்டுகள் உள்ளிட்ட வளர்ந்து வரும் சிகிச்சைகளையும், ஸ்டேடின்கள், எசெடிமைப், பெம்பெடோயிக் அமிலம், PCSK9 தடுப்பான்கள், இன்க்லிசிரான், அஃபெரெசிஸ் மற்றும் மரபணு அடிப்படையிலான தலையீடுகள் போன்ற கொழுப்பைக் குறைக்கும் உத்திகளையும் விரிவாக உள்ளடக்கியுள்ளது. இந்த முன்னேற்றங்கள் இருதய நோய்களின் விளைவுகளைக் கணிசமாக மேம்படுத்தி, நோயின் சுமையைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தகத்திற்கான தனது முன்னுரையில், டாக்டர் ஜிதேந்திர சிங், உடல் பருமன் மற்றும் டிஸ்லிபிடீமியா ஆகியவற்றை இந்தியாவிலும் உலக அளவிலும் அதிகரித்து வரும் இருதய நோய்கள் மற்றும் இறப்புகளின் சுமைக்குக் காரணமாக அமையும் முக்கிய பொது சுகாதார சவால்களாக விவரிக்கிறார். இந்த சவால்களைத் திறம்பட எதிர்கொள்ள, மேம்படுத்தப்பட்ட விழிப்புணர்வு, தடுப்பு உத்திகள் மற்றும் சான்றுகள் அடிப்படையிலான மருத்துவ நடைமுறைகளின் அவசியத்தை அவர் வலியுறுத்துகிறார்.

2050-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் உடல் பருமன் பரவல் கடுமையாக அதிகரிக்கும் என்று கணிப்புகள் சுட்டிக்காட்டுவதைக் குறிப்பிட்டு, நீண்டகால சுகாதார மற்றும் பொருளாதார அபாயங்களைக் குறைப்பதற்காக, விழிப்புணர்வை வலுப்படுத்தவும், முன்கூட்டியே பரிசோதனை செய்யவும், தடுப்பு சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் டாக்டர் ஜிதேந்திர சிங் அழைப்பு விடுத்தார்.

இந்தப் புத்தகம் 23 பிரிவுகளையும் 172 அத்தியாயங்களையும் கொண்டுள்ளது. இது ஆராய்ச்சிக்கும் படுக்கை நேரப் பராமரிப்புக்கும் இடையே உள்ள இடைவெளியை இணைக்கும் ஒரு விரிவான, சான்றுகளின் அடிப்படையிலான மருத்துவ வளத்தை வழங்குகிறது. இது திறன் மேம்பாடு, மருத்துவச் சிறப்பு மற்றும் நோயாளிகளின் மேம்பட்ட விளைவுகளுக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகளாவிய நிபுணத்துவத்தை ஒரே அதிகாரப்பூர்வமான தொகுப்பில் ஒன்றிணைப்பதில் ஆற்றிய கல்விசார் தலைமை மற்றும் பங்களிப்பிற்காக, டாக்டர் எச்.கே. சோப்ரா மற்றும் பதிப்பாசிரியர் குழுவினருக்கு டாக்டர் ஜிதேந்திர சிங் பாராட்டு தெரிவித்தார். இந்நிகழ்வில், டாக்டர் விவேகா குமார், டாக்டர் பிரவீன் சந்திரா, டாக்டர் ஜே.பி.எஸ். சாஹ்னி, டாக்டர் மோனா பாட்டியா, டாக்டர் அனு குரோவர், ஸ்ரீகாந்த் பாட்டியா மற்றும் ஆனந்த் குமார் உள்ளிட்ட முன்னணி இருதயநோய் நிபுணர்களும் பங்களிப்பாளர்களும் கலந்துகொண்டனர்.

Leave a Reply