மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், இங்கிலாந்து அமைச்சர் கனிஷ்க நாராயணுடன் சந்திப்பு – வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து ஆலோசனை.

புதுதில்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்று வரும் செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, அறிவியல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், இங்கிலாந்து செயற்கை நுண்ணறிவு இணையப் பாதுகாப்பு அமைச்சர் திரு கனிஷ்க நாராயணுடன் இருதரப்புப் பேச்சு நடத்தினார். இந்தியா-இங்கிலாந்து ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு ஒத்துழைப்பின் கீழ் ஏப்ரல் 2023-ல் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் முன்னேற்றத்தை இரு அமைச்சர்களும் ஆய்வு செய்தனர். உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டில் 2015-ல் 81-வது இடத்திலிருந்து 2025-ல் 38-வது இடத்திற்கு இந்தியா உயர்ந்ததையும் விரைவான முன்னேற்றத்தையும் டாக்டர் ஜிதேந்திர சிங் பகிர்ந்து கொண்டார்.

தொலைத்தொடர்பு, தூய எரிசக்தி, உயிரி தொழில்நுட்பம், விவசாயம், குவாண்டம் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றில் நடைபெற்று வரும் கூட்டு முயற்சிகள் குறித்து இருவரும் விவாதித்தனர்.

இரு நாடுகளிலும் உள்ள புத்தொழில் நிறுவனங்களிடையே ஒத்துழைப்பை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்ட ஆராய்ச்சி – புதுமை வழித்தடத்தை நிறுவுவது குறித்தும் அவர்கள் விவாதித்தனர். இந்த முயற்சி தொழில்நுட்ப பரிமாற்றத்தை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அறிவியல், தொழில்நுட்பத் துறையின் செயலாளர் பேராசிரியர் அபய் கரண்டிகர், புவி அறிவியல் அமைச்சகம், உயிரி தொழில்நுட்பத் துறை, வெளியுறவுத் துறை ஆகியவற்றின் மூத்த பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் இந்தியத் தரப்பில் பங்கேற்றனர்.

இங்கிலாந்து தூதுக்குழுவில் அந்நாட்டின் அறிவியல் தொழில்நுட்ப கட்டமைப்பின் பிராந்திய இயக்குநர் திருமதி சோபியா நெஸ்டியஸ்-பூத், அந்நாட்டின் அறிவியல் மற்றும் புதுமைக் கண்டுபிடிப்புகள் பிரிவுத் தலைவர் திரு ஜாக் லேண்டர்ஸ், அமைச்சரின் தனிச் செயலாளர் திரு ஜாக் காலின்ஸ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்

One Response

  1. MANIMARAN February 21, 2026 8:42 am

Leave a Reply