மும்பை அருகே இந்திய கடலோர காவல் படை மேற்கொண்ட கடல்–வான்வழி ஒருங்கிணைந்த நடவடிக்கையில் சர்வதேச அளவிலான எண்ணெய் கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டது. 05–06 பிப்ரவரி அன்று நடைபெற்ற இந்த நடவடிக்கையில், சட்டவிரோதமாக எண்ணெய் மற்றும் எண்ணெய் சார்ந்த சரக்குகளை கடத்தி வந்த மூன்று கப்பல்கள் இடைமறித்து கைப்பற்றப்பட்டன.
மும்பையின் மேற்கே சுமார் 100 கடல் மைல் தொலைவில் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கப்பல்களை இந்தியக் கடலோரக் காவல்படை கப்பல்கள் இடைமறித்து தடுத்து நிறுத்தின. கப்பல்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை, மின்னணுத் தரவுகள் ஆய்வு மற்றும் குழுவினரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம், நடுக்கடலில் கப்பல்களுக்கிடையே எண்ணெய் மாற்றம் செய்யும் கடத்தல் முறைகள் உறுதி செய்யப்பட்டன.
இந்த கடத்தல் வலையமைப்பு பல நாடுகளில் செயல்படும் நபர்களால் இயக்கப்பட்டதாகவும், சர்வதேச நீர்பரப்புகளில் எண்ணெய் மாற்றம் செய்து, இந்தியா உட்பட கடலோர நாடுகளுக்குச் செலுத்த வேண்டிய வரிகளைத் தவிர்த்ததாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன. கப்பல்கள் அடிக்கடி தங்களின் அடையாளங்களை மாற்றியதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
மேம்பட்ட தொழில்நுட்ப கண்காணிப்பு மூலம் தொடங்கப்பட்ட இந்த நடவடிக்கை, கடல்சார் பாதுகாப்பில் இந்தியாவின் முக்கியப் பங்கையும், சர்வதேச விதிமுறைகளை அமல்படுத்தும் அதன் உறுதியையும் மீண்டும் எடுத்துக்காட்டுகிறது.
திவாஹர்
