தமிழக அரசு மாநிலத்தில் தொடர்ந்து நடைபெறும் போராட்டங்களுக்கு தீர்வு ஏற்படுத்தும் வகையில் வாக்குறுதிகள் அனைத்தையும் விரைவில் நிறைவேற்ற வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.

தமிழக அரசு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள், டாஸ்மாக் ஊழியர்கள், பேராசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் நடத்தும் போராட்டத்தை முக்கிய கவனத்தில் கொள்ளாமல் ஆட்சி செய்வது முறையல்ல.

;தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு தேர்தல் கால வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என காத்திருந்தும் இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படாமல் இருப்பதால் மாநிலத்தில் அவ்வப்போது ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடைபெறுகின்றன.

குறிப்பாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் போக்குவரத்துக்கழக ஊழியர்கள் போராட்டங்கள் நடத்தியும் உரிய தீர்வு எட்டப்படவில்லை.

தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

டாஸ்மாக் பணியாளர்கள், சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்திலும் ஈடுபட்டுள்ளனர். அரசு உதவி பெறும் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் தூத்துக்குடியில் வாழ்வாதார பணிக்குழு ஊழியர்களின் போராட்டங்களும் நடைபெறுகின்றன. அதாவது 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் டாஸ்மாக் ஊழியர்கள் நடத்திய முற்றுகை போராட்டத்தில் பலர் கைது செய்யப்பட்டனர். இதனால் 1,000 க்கும் மேற்பட்ட மையங்கள் மூடப்பட்டன. அதே போல 80,000 க்கும் மேற்பட்ட சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள், தங்களை அரசு ஊழியராக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசு உதவி பெறும் கல்லூரி பேராசிரியர்களுக்கு பணி மேம்பாடு வழங்காததைக் கண்டித்து, சென்னையில் கண்களில் கருப்புத் துணி கட்டி போராட்டம் நடைபெற்றது.

தமிழக அரசு போராட்டத்தில் ஈடுபடுபவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காண வேண்டுமே தவிர போராட்டக்காரர்களை கைது செய்யும் அடக்கு முறை நியாயமில்லை.

நியாயமான போராட்டத்தில் ஈடுபட்டாலும் அரசுப் பணிகள் பாதிக்கப்படுவதை தமிழக அரசு முக்கிய கவனத்தில் கொண்டு செயல்பட்டிருக்க வேண்டும்.

எனவே தமிழக அரசு வாக்குறுதிகள் அனைத்தையும் விரைவில் நிறைவேற்றி போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து அனைத்து தரப்பு மக்களுக்குமான அரசாக செயல்பட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply