நாட்டுப்பற்று, ஒழுக்கம், சமூகப் பொறுப்புணர்வு போன்ற பண்புகளுடன் இளைஞர்களை வழிநடத்துவதில் தேசிய மாணவர் படையினர் முக்கிய பங்காற்றி வருவதாக கடற்படை தளபதி அட்மிரல் தினேஷ் திரிபாதி தெரிவித்தார்.
தில்லி கண்டோன்மென்டில் உள்ள தேசிய மாணவர் படையின் குடியரசுதின முகாமிற்கு வருகை தந்த அவருக்கு ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை பிரிவுகளைச் சேர்ந்த என்.சி.சி. மாணவர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், ‘ஆபரேஷன் சிந்துர்’ நடவடிக்கையின்போது மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் 72,000 என்.சி.சி மாணவர்கள் பங்கேற்று சிறப்பாக செயல்பட்டதற்கு பாராட்டு தெரிவித்தார். ட்ரோன் செயல்பாடுகள், சைபர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு உட்பட தேசிய மாணவர் படையினரால் பின்பற்றப்படும் புதுமையான பயிற்சி நடவடிக்கைகளுக்கும் பாராட்டு அவர் தெரிவித்தார்.
தாம் என்.சி.சி. அமைப்பின் மாணவராக இருந்த நாட்களை அவர் அப்போது நினைவுகூர்ந்தார். மேலும் குடியரசுதின முகாமிற்கு தேர்தெடுக்கப்பட்ட தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு அவர் வாழத்து தெரிவித்தார்.
என்.சி.சி. மாணவர்களின் அணிவகுப்பு, துல்லியமான பயிற்சி, இசைக்குழுவின் செயல்பாடு மற்றும் கலாச்சார நிகழ்ச்சி ஆகியவற்றை திரு திரிபாதி பாராட்டினார்.
எம்.பிரபாகரன்
