புதுதில்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் 9வது பட்டமளிப்பு விழாவில் குடியரசு துணைத் தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் இன்று உரையாற்றினார். பட்டம் பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த அவர், தங்களது அறிவையும் திறன்களையும் நாட்டிற்கு சேவையாற்ற அர்ப்பணிக்குமாறு அவர்களை வலியுறுத்தினார்.
சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினத்தில் அவரது போதனைகளை நினைவுகூர்ந்த குடியரசு துணைத்தலைவர், கல்வி என்பது பட்டம் பெறுவதற்கு அப்பாற்பட்டு, நன்னடத்தையை வளர்க்கவும், அறிவுத்திறனை வலுப்படுத்தவும், தனிநபர்கள் சுயமாக திகழ அதிகாரம் அளிக்கவும் வேண்டும் என்று தெரிவித்தார். இந்திய இளைஞர்களின் கல்வி மற்றும் முறையான பயிற்சி மட்டுமே, பிரதமர் திரு நரேந்திர மோடியின் 2047-ம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்க உதவும் என்று அவர் வலியுறுத்தினார்.
நாட்டின் நாகரீக பாரம்பரியத்தை சுட்டிக்காட்டிய குடியரசு துணைத் தலைவர், நாலந்தா, தட்சசீலம் போன்ற பழங்கால கற்றல் மையங்களை குறிப்பிட்டு, உபநிடதங்கள், பகவத் கீதை முதல் கௌடில்யரின் அர்த்தசாஸ்திரம், திருவள்ளுவரின் திருக்குறள் வரை இந்திய வேதங்களும் செம்மொழிகளும் சமூக மற்றும் நெறிமுறை வாழ்க்கையின் மையத்தில் கற்றலைத் தொடர்ந்து நிலைநிறுத்தியுள்ளதாக கூறினார்.
உண்மையான கல்வி என்பது நன்னடத்தை மற்றும் குணாதியங்களை வடிவமைக்கிறது என்றும், அது பட்டங்களைப் பெறுவதோடு வரையறுக்கப்படுவதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். நவீன அறிவியலும் பாரம்பரிய மாண்புகளும் ஒன்றாக வளர்ச்சியடைய வேண்டும் என்று குடியரசு துணைத்தலைவர் வலியுறுத்தினார்.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ஜனநாயக நெறிமுறை குறித்து குறிப்பிட்ட அவர், விவாதம், கருத்து வேறுபாடு ஆகியவையும் ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு அடிப்படை அம்சங்கள் என்றும் குறிப்பிட்டார்.
எஸ்.சதிஸ் சர்மா
