மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா இன்று ராஜஸ்தானின் ஜோத்பூரில் மகேஸ்வரி உலகளாவிய மாநாடு மற்றும் கண்காட்சி – 2026-ல் உரையாற்றினார். இந்த நிகழ்வில், மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா, ராஜஸ்தான் முதலமைச்சர் திரு பஜன் லால் சர்மா, மத்திய சுற்றுலா அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா, இந்த நாட்டிற்கு பெரிய பங்களிப்பை வழங்கிய ஒரு சமூகத்தினரிடையே இருப்பதில் மகிழ்ச்சி அடைவதாக கூறினார். மகேஸ்வரி சமூகத்தினர், ஒவ்வொரு துறையிலும் தேசத்தை அலங்கரித்து ஒளிரச் செய்துள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.
முகலாயர்களுக்கு எதிரான போராட்டம் முதல் சுதந்திர இயக்கம் வரை, சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டைத் தன்னிறைவு பெறச் செய்யும் முயற்சிகளில், மகேஸ்வரி சமூகத்தின் பங்களிப்பு விலைமதிப்பற்றது என்று அவர் கூறினார். உற்பத்தி, வர்த்தகம், செல்வம் உருவாக்கம், தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வது என எதுவாக இருந்தாலும், மகேஸ்வரி சமூகம் எப்போதும் இந்தத் துறைகளில் முற்போக்கான, தொலைநோக்கு தன்மையை நிரூபித்துள்ளது என்று அவர் தெரிவித்தார். பாரம்பரியமும் முன்னேற்றமும் கைகோர்த்துச் செல்ல முடியும் என்பதை மகேஸ்வரி சமூகம் நிரூபிக்கிறது என்று அவர் கூறினார்.
மகேஸ்வரி சமூகம் சேவைக்கான அதன் உறுதிப்பாட்டை நிறைவேற்றியுள்ளது என்று திரு அமித் ஷா தெரிவித்தார். மகேஸ்வரி சமூகத்திலிருந்து வந்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் பட்டியல் மிக நீளமானது என்றும் அவர் கூறினார்.
சுதேசி நமது வாழ்க்கை மந்திரமாக இருக்க வேண்டும் என்றும், நமது சொந்த நாட்டின் மொழிகள் நமது நடைமுறையில் ஒலிக்க வேண்டும் என்றும் திரு அமித் ஷா வலியுறுத்தினார். மகேஸ்வரி சமூகத்தினர் எப்போதும் வேலை தேடுபவர்களாக அல்லாமல், வேலை உருவாக்குபவர்களாக இருந்து வருகின்றனர் என்று அவர் கூறினார்.
குழந்தைகளுடன் நம் தாய் மொழியில் உரையாடி, தாய்மொழியைக் கற்றுக்கொடுத்தால், அவர்கள் இயல்பாகவே நமது வரலாற்றுடன் ஆழமான தொடர்பை வளர்த்துக் கொள்வார்கள் என்று அவர் குறிப்பிட்டார். இது ஒரு தலைமுறை முன்னேற உதவும் எனவும், இந்திய மொழிகளைப் பயன்படுத்துவது சமூகத்தையும் கலாச்சாரத்தையும் உயிர்ப்புடன் வைத்திருக்க ஒரு வழிமுறையாகும் என்றும் திரு அமித் ஷா கூறினார். தேவைப்படும்போது நிச்சயமாக வெளிநாட்டு மொழிகளைப் பேச வேண்டும் எனவும், ஆனால் பெற்றோர் எப்போதும் தங்கள் குழந்தைகளிடம் தங்கள் தாய்மொழியில் பேச வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
திவாஹர்
