உச்ச நீதிமன்ற தீர்ப்பின் உண்மை நகல், நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் போது ஆதார் எண்ணை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும் என்று சட்டம் கொண்டு வரப்பட்டு மத்திய அரசின் பட்ஜெட்டில் வெளியிடப்பட்டது.
இதே போல் பான் கார்டு வாங்க ஆதார் அட்டை அவசியம் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அந்த மனுக்களில், ஆதார் எண்ணை கட்டாயம் ஆக்குவது இந்திய அரசியல் சட்டத்துக்கு எதிரானது. இந்திய குடிமகன்கள் யாரையும் ஆதார் எண்ணை கண்டிப்பாக தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறுவது ஆதார் சட்ட நடைமுறைக்கு முரணானது. குறிப்பாக ஒழுங்காக வரி செலுத்துபவர்களிடம் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் போது ஆதார் எண்ணை கட்டாயம் ஆக்க நிர்ப்பந்தம் செய்யக்கூடாது என்று குறிப்பிட்டு இருந்தனர்.
வழக்கு விசாரணையின் போது போலி பான் கார்டு, போலி ரேஷன் கார்டுகளை நீக்க ஆதார் எண்ணை கட்டாயம் ஆக்குவதுதான் தீர்வா? இது மக்களை ஆதார் கார்டு பெறுவதை வலுக்கட்டாயமாக திணிப்பது போல் அல்லவா இருக்கிறது. கோர்ட்டு உத்தரவையும் மீறி மீண்டும் ஆதாரை கட்டாயம் ஆக்கியது ஏன்? என்று கோர்ட்டு கேள்வி எழுப்பியது.
வழக்கு விசாரணை தொடர்ந்த நிலையில் இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் ‘பான்’ எண்ணுடன் ‘ஆதார்’ எண்ணை இணைக்கும் மத்திய அரசின் உத்தரவுக்கு தடை விதித்தது.
பான் கார்டுடன், ஆதார் எண் இணைக்காவிட்டாலும், பான் கார்டு செல்லும். பான் கார்டு பெறுவதற்கும் ஆதார் எண் கட்டாயம் ஆக்கக்கூடாது. இது தொடர்பாக மேலும் அரசியல் சாசன பெஞ்ச் முடிவு செய்யும் வரை இந்த தடை தொடரும்.
இவ்வாறு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com
